மூணாறில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - போக்குவரத்து நெரிசலால் ஓட்டுநர்கள் அவதி


கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மூணாறு வரத் தொடங்கி உள்ளனர். இதனால் நேற்று பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மூணாறில் உள்ள பசுமையான பள்ளத்தாக்குகள், தேயிலை தோட்டங்கள் உள்ளிட்டவை காண ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மூணாறு நகர், கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, மாட்டுப்பட்டி சாலை, உடுமலைப்பேட்டை சாலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 கி.மீ. வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீஸார் இல்லாததால் சுற்றுலா பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

மூணாறு காலனி பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் உள்ளூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இப்பகுதியில் ரிசார்ட்ஸ், காட்டேஜ்கள் அதிகரித்துவிட்டன. ஆனால், அதற்கேற்ப வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி இல்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து சுற்றுலா பயணிகள் சிலர் கூறுகையில், சுற்றுலா மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கேரள அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால் போக்குவரத்துக்கான உள் கட்டமைப்பை விரிவுபடுத்தவில்லை. ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் இங்கு வந்து செல்கின்றன. ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றாதது, விரிவுபடுத்தப்படாத சாலைகளால் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது என்று கூறினர்.

x