பத்திரிகை சுதந்திரத்தை காப்பது குடிமக்களின் உரிமைக்கானது: முதல்வர் ஸ்டாலின் கருத்து


‘யாருக்கும் அஞ்சாத ஊடகவியல் இல்லாவிட்டால், மக்களாட்சி இருளில் மாண்டுவிடும்’ என்று உலக பத்திரிகை சுதந்திர தின வாழ்த்து செய்தியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக பத்திரிகை சுதந்திர தினம் நேற்று (மே 3) கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: ஊடக சுதந்திரத்துக்கான உலக தரவரிசை பட்டியலில் இந்தியாவின் இடம் 151 என படுபாதாளத்தில் உள்ளது. காரணம், கேள்விகளை கண்டாலே மத்திய பாஜக ஆட்சி அஞ்சுகிறது. ஊடக அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்துகிறது. செய்தியாளர்களை சிறையில் தள்ளுகிறது. பாஜக அரசின் ஊழல்கள், உரிமை மீறல்கள் மற்றும் பெரும்பான்மைவாத போக்கை அம்பலப்படுத்துவோரை அடக்குகிறது.

உலக பத்திரிகை சுதந்திர நாளில், ‘யாருக்கும் அஞ்சாத ஊடகவியல் இல்லாவிட்டால், மக்களாட்சி இருளில் மாண்டுவிடும்’ என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்வோம். பத்திரிகை சுதந்திரத்தை காப்பது என்பது ஊடகங்களுக்கானது மட்டுமல்ல. அது குடிமக்கள் அனைவரது கேள்வி கேட்கும், உண்மையை அறிந்துகொள்ளும், அதிகாரத்தை நோக்கி உண்மையை உரைக்கும் உரிமைக்கானதாகும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்

x