சுதந்திர போராட்ட தியாகிக்கு வீடு ஒதுக்கீடு: அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


சுதந்திர போராட்ட தியாகிக்கு முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் வீடு ஒதுக்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் சங்க மாநில துணைத் தலைவரான சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வி.கே.செல்லம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியதாவது:

இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலமாக கட்டப்படும் வீடுகளில் ஒரு சதவீதம் ஒதுக்கீடு வழங்குவது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், ஐஎன்ஏ-வில் பணியாற்றிய எனக்கும் வீடு ஒதுக்குமாறு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கும், தமிழக அரசுக்கும் மனு கொடுத்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனது மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் கடந்த 2021-ல் உத்தரவிட்டது. இதன்பிறகு, நான் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி அளித்த மனுவை வீட்டுவசதி வாரிய தலைவர் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்து, சுதந்திர போராட்ட தியாகியான எனக்கு முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் வீடு ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘முன்னாள் ராணுவ வீரருக்கான ஒதுக்கீட்டின்கீழ் மனுதாரருக்கு வீடு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்கலாம். எனவே, வீடு ஒதுக்கீடு கோரி மனுதாரர் 2 வாரங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து, சட்டத்துக்கு உட்பட்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்

x