‘பாடத்திட்டத்தில் சோழர்கள் வரலாற்றை திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள்’ - நடிகர் மாதவன் ஆதங்கம்!


சென்னை: முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் சுமார் 800 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், சோழப் பேரரசானது 2,400 ஆண்டுகள் நீடித்தது. ஆனால் அவர்களின் வரலாறானது, பாடப்புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தில் சுருக்கப்பட்டுள்ளது என நடிகர் மாதவன் கூறியுள்ளார்

தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் மாதவன் அளித்த பேட்டியில், ‘இந்திய நாட்டின் கடந்த காலத்தின் முக்கிய பகுதிகள், குறிப்பாக தெற்கு பகுதியை ஆட்சி செய்த அரசாங்கங்களின் சாதனைகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. பாண்டியர்கள்,சோழர்கள், சேரர்கள் உள்ளிட்டவர்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள்.

நான் பள்ளியில் வரலாற்றைப் படித்தபோது, முகலாயர்கள் பற்றி எட்டு அத்தியாயங்களும், ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நாகரிகங்கள் பற்றி இரண்டு அத்தியாயங்களும், பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சுதந்திரப் போராட்டம் பற்றி நான்கு அத்தியாயங்களும் இருந்தன.ஆனால் தெற்கு பகுதிகளின் அரசர்களான சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் மற்றும் சேரர்கள் பற்றி ஒரு அத்தியாயம் மட்டுமே இருந்தன.

வரலாற்றில் சோழப் பேரரசு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், பள்ளிப் பாடப்புத்தகங்களில் சோழப் பேரரசு பற்றிய தகவல்கள் இல்லை. முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் சுமார் 800 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், சோழப் பேரரசானது 2,400 ஆண்டுகள் நீடித்தது.

சோழர்களின் கடல் பயணம் மற்றும் கடற்படை சக்தியின் முன்னோடிகளாக இருந்தனர். ரோம் வரை நீண்ட வர்த்தக கடல் பாதைகளை அவர்கள் கொண்டிருந்தனர். நமது வரலாற்றின் அந்தப் பகுதி எங்கே?. நமது வலிமைமிக்க கடற்படைப் படைகளுடன் அங்கோர்வாட் வரை கோயில்களைக் கட்டுவது பற்றிய குறிப்பு எங்கே?. அவர்களால் சமண மதம், பௌத்தம் மற்றும் இந்து மதம் சீனாவிற்கு பரவியது. கொரியாவில் உள்ள மக்கள் பாதி தமிழில் பேசுகிறார்கள், காரணம் அவர்கள்தான். இதையெல்லாம் ஒரே ஒரு அத்தியாயத்தில் தொகுத்துள்ளோம்

ஆனால் இந்த வளமான வரலாறானது, பாடப்புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தில் சுருக்கப்பட்டுள்ளது. இது யாருடைய கதை? பாடத்திட்டத்தை யார் தீர்மானித்தார்கள்? தமிழ் உலகின் பழமையான மொழி, ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரியாது. நமது கலாச்சாரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் அறிவு இப்போது கேலி செய்யப்படுகிறது. இதைச் சொல்வதால் நான் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம், ஆனால் நான் அதைச் சொல்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

x