சேலம்: ஏற்காடு அருகே மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கோவிலூர் கிராமத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான வாணீஸ்வரர் கோயில் இடிக்கப்படுவதை தொல்லியல் சட்டத்தின்படி தடுத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என சேலம் வரலாற்றுச் சங்கம் சார்பில் அதன் தலைவர் இமானுவேல் ஜெயசிங், பொதுச்செயலாளர் பர்ணபாஸ் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.
மனு குறித்து அவர்கள் கூறியதாவது: ஏற்காட்டை அடுத்த மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கோவிலூர் மலைக் கிராமத்தில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 700 ஆண்டுகள் பழமையான வாணீஸ்வரர் என்ற சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றிலும், வரலாற்று குறிப்புகளைக் கொண்ட பழமையான 4 தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இந்நிலையில், கிராம மக்கள், கோயிலை இடித்து அகற்றிவிட்டு அதே இடத்தில் புதியதாக மீண்டும் கோயிலை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இந்த கோயிலை இடித்து அகற்றினால், அதில் உள்ள கல்வெட்டுகள் சேதமடைவதுடன் பாரம்பரிய கட்டுமானமும் அழிந்துவிடும். வரலாற்று சின்னங்கள் மற்றும் இடங்கள் பாதுகாப்பு சட்டம்- 2010 தொல்லியல் சட்டத்தின்படி, வரலாற்று சிறப்புமிக்க இந்த சிவன் கோயிலை இடிக்கக் கூடாது. எனவே, வாணீஸ்வரர் கோயில் இடிக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டும்.
கோயிலின் அருகில் கிராம மக்கள் புதியதாக கோயிலைக் கட்டுவதற்கு அரசு உதவ வேண்டும். மேலும், பழமையான கட்டுமானம் கொண்ட வாணீஸ்வரர் சிவன் கோயிலின் பழமை மாறாமல் அதனை புதுப்பித்து, அங்குள்ள கல்வெட்டுகள், சிற்பங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.