திருநெல்வேலி/ தென்காசி: திருநெல்வேலி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலையில் இடி மின்னலுடன் ஒரு மணிநேரம் கோடை மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அதேநேரத்தில் காலை மற்றும் நண்பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமுள்ளது.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் 1 மணி நேரம் கோடை மழை பெய்தது. மகாராஜநகர், கொண்டாநகரம், திருமால்நகர், கிருஷ்ணாபுரம், பாளையங்கோட்டை பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
பாளையங்கோட்டையில் மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் ஒருசில இடங்களில் மரங்கள் சாய்ந்து மின்கம்பிகளில் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. கிருஷ்ணாபுரம் கேடிசி பி காலனி பகுதியில் மழை மற்றும் காற்றால் மின்கம்பியில் மரம் விழுந்தததால் யாளையங்கோட்டை உபமின் நிலையத்திலிருந்து முறப்பநாடு வரை செல்லும் மின்பாதையில் மின்தடங்கல் ஏற்பட்டது. மரத்தை வெட்டி அகற்றும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து மின் விநியோகம் சீரானது.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. நேற்று பகல் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் சுரண்டை, கீழப்பாவூர், கடையம், ஆழ்வார்குறிச்சி, தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பெய்தது. இப்பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது.
சங்கரன்கோவிலில் பெய்த பலத்த மழையால் சங்கர நாராயணசுவாமி கோயிலில் தண்ணீர் தேங்கியது. சங்கரலிங்க சுவாமி சந்நிதி, சங்கரநாராயண சுவாமி சந்நிதி, கோமதி அம்மன் சந்நிதி, சண்முகர் சந்நிதி முன்பு ஓரடி அளவுக்கு தேங்கிய தண்ணீரால் பக்தர்கள் பெரும் அவதிப்பட்டனர்.
தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால் உடனடியாக தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஓடை தெரு அருகே உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதிப்பட்டனர்.