விஜயை பார்க்க எமர்ஜென்சி விடுப்பு எடுத்த காவலர் சஸ்பெண்ட்; வைரல் புகைப்படத்தால் வசமாக சிக்கினார்!


மதுரை: தவெக தலைவர் விஜயை வரவேற்க அவசர விடுப்பு எடுத்து கட்சிக்கொடி மற்றும் பேட்ஜ் அணிந்து சென்ற காவலர் கதிரவன் மார்க்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொடைக்கானலில் நடைபெறும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் விஜய் கடந்த 1ஆம் தேதி மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். விஜயை காண்பதற்காக அன்று காலை முதலே தவெக-வினரும், விஜய் ரசிகர்களும் மதுரை விமான நிலைய வளாகத்தில் குவிந்தனர். இந்த நிலையில், மதுரை வந்த விஜயை எமர்ஜென்சி விடுப்பு எடுத்து பார்க்கச் சென்ற காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மதுரை மாவட்டம் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் கதிரவன் மார்க்ஸ். இவர், சித்திரைத் திருவிழாவிற்காக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர், எமர்ஜென்ஸி என்று அவசர விடுப்பு கேட்டு மதுரை வந்த விஜயை பார்க்கச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மேலும், காவலர் கதிரவன் மார்க்ஸ், தவெக கட்சித் துண்டு மற்றும் பேட்ஜ் அணிந்து விஜயை பார்க்க சென்ற காட்சிகள் வெளியானது.

இச்சம்பவம், மதுரை காவல் ஆணையர் லோகநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து, காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் இப்போது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

x