சென்னை: சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.285 கோடியை அபராதத்துடன் சேர்த்து ரூ.570 கோடி செலுத்தும்படி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்துக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது,
கடந்த 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஜிஎஸ்டி வரியாக செலுத்த வேண்டிய ரூ.285 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரத்து 342-ஐ அபராதத்துடன் சேர்த்து ரூ.570 கோடியாக செலுத்தும்படி ஜிஎஸ்டி ஆணையரகம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்துக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், ‘‘மல்டி சிஸ்டம் ஆபரேட்டர் என்ற முறையில் அரசு கேபிள் டிவி கழகம், தொலைக்காட்சி சேனல்களின் சிக்னல்களை உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கி வருகிறது. உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அந்த சிக்னல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.
இந்த சேவைக்காக வாடிக்கையாளரிடமிருந்து உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வசூல் செய்யும் தொகையில் அரசு கேபிள் டிவி கழகம் சம வருமானம் பெறுகிறது. இதற்கான ஜிஎஸ்டி வரி எந்த பாக்கியும் இல்லாமல் முறையாக செலுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பங்குக்கு அவர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். அதற்கு அரசு கேபிள் டிவி கழகம் எந்த வகையிலும் பொறுப்பாகாது. எனவே ஜிஎஸ்டி வரி ரூ.285 கோடியை அபராதத்துடன் சேர்த்து ரூ.570 கோடியாக செலுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்துக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதற்கு தடை விதி்க்க வேண்டும்’’ எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வருமானத்தை, அரசு கேபிள் டிவி கழகத்தின் வருமானமாகக் கருத முடியாது. இதுதொடர்பாக ஜிஎஸ்டி ஆணையரகத்துக்கு பதிலளித்தும் அதை பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என வாதிட்டார்.
அதையேற்ற நீதிபதி, ரூ.285 கோடி ஜிஎஸ்டியை அபராதத்துடன் சேர்த்து ரூ.570 கோடியாக செலுத்தும்படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்துக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.