தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 29-ம் தேதி காலை விநாடிக்கு 3,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 30-ம் தேதி 2,500 கனஅடியாக குறைந்தது. மே 1-ம் தேதியும் அதே அளவுடன் நீர்வரத்து தொடர்ந்தது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 4,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,363 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,323 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 107.81 அடியாகவும், நீர் இருப்பு 75.33 டிஎம்சியாகவும் இருந்தது.