சென்னை: நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான நாய்களை பராமரிக்க, தமிழகம் முழுவதும் 72 காப்பகங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன், நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், கால்நடைத்துறை செயலர் நா.சுப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 500 மருத்துவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் 500 பேருக்கு நாய்களை பிடிப்பதற்கான பயிற்சி வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள்: கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களுக்காக 72 காப்பகங்கள் அமைக்கப்படும். காப்பகங்கள் அமைப்பதற்கான இடம் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும். தொண்டு நிறுவனங்கள் இக்காப்பகங்களை பராமரிக்கும் பணியை மேற்கொள்ளும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். விலங்குகள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதி இல்லாத பகுதிகளில் கூடுதலாக அறுவை சிகிச்சை மையங்கள் மற்றும் அத்துடன் இணைந்த நாய் காப்பகங்கள் கால்நடை மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்படும்.
புதிதாக 10 மையங்கள்: ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ளூர் கண்காணிப்பு குழு அமைத்து நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே 5 மையங்கள் செயல்படும் நிலையில், புதிதாக 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு மையங்கள் உருவாக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், இத்துடன் இணைந்து 10 புதிய கால்நடை மருத்துவமனைகள் தொடங்கவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
அதிகரித்துவரும் நாய்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை பணிகளை துரிதமாக மேற்கொள்ள கூடுதலாக நாய் பிடி வாகனங்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், அதற்கு தேவையான பணியாளர்களை நியமிக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்காக உள்கட்டமைப்பு வசதிகளை விரைந்து முடித்து, செயல்பாட்டுக்கு கொண்டு வந்து நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.