மதுரை: “பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைத்தால் மட்டும் முதல்வர் கொதித்துப் பேசுகிறார்” என மதுரை மேதின கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.
மதுரையில் மாநகர் மாவட்ட அதிமுக அண்ணா தொழிற் சங்கம் சார்பில், பெத்தானியாபுரத்தில் மேதின பொதுக்கூட்டம் நடந்தது. . முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: “இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழ்நாட்டில் தான் மே தினத்தை நமது முன்னோர்கள் கொண்டாடினர். உழைக்கும் வர்க்கத்தை மேற்கோள் காட்ட மெரினாவில் சிலை வைத்தனர்.
தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள், சலுகைகளை கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கியது அதிமுக ஆட்சி. விடிவு தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் 5% சம்பள உயர்வு கொடுத்துள்ளனர். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக திட்டங்களை அறிவித்துவிட்டு வாயில் தான் வடை சுடுகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த ஆட்சியை எப்போது விரட்டலாம் என, மக்கள் காத்திருக்கின்றனர்.
ஸ்டாலின் மட்டும் தான் 234 தொகுதியை ஜெயிப்போம் என கூறிகிறாரே தவிர, மக்கள் நினைக்கவில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் மட்டும் கொதித்துப் பேசுகிறார் முதல்வர். நீங்க கூட்டணி வைத்தால் மட்டும் இனிக்கும். கூடா நட்பு கேடில் முடியும் என, உங்க அப்பாவே காங்கிரஸ் குறித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கும் கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்கு ஆதரவாகவும், ஆட்சிக்கு எதிராகவும் குரல் கொடுக்கவில்லை.
தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக ஆட்சிக்கு வந்த திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் நடத்துகின்றனர். இன்றைக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத்தின் பழிச்சொல்லுக்கு முதல்வர் ஆளாகி வருகிறார். முதல் நிதிநிலை அறிக்கையில் பிடிஆரை பாராட்டி பேசினார். ரூ. 30 ஆயிரம் கோடி குறித்து ஆடியோவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரியாமல் பேசிவிட்டார். இதற்காக அவரை ஏதோ ஒருதுறைக்கு மாற்றி, அவரே அத்துறையைவிட்டு விலகும் நிலைக்கு தள்ளி இருக்கிறது திமுக தலைமை.
உங்கள் அமைச்சரவையே ஜாமீன் பெற்ற அமைச்சரவை. அமைச்சர்கள் வாய்தாவுக்கு சென்று வருகின்றனர். திமுக அமைச்சர்களை பொறுத்த வரையில் கலக்சன், கரப்சன் தான். அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பெண்களை இழிவாகவும், தாழ்த்தப்பட்ட கவுசின்லரை அவமரியாதையாகவும், பெண்களை ஓசி எனவும் பேசியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பொன்முடி என்றைக்கோ ஜெயிலுக்கு போயிருப்பார்.
இந்திய முதல்வர்கள், அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என, பிரதமரே பாராட்டிய ஒரு தலைவர் எங்களது பொதுச்செயலாளர். போதைப் பொருள் கடத்தலில் இருப்பவர்கள் எல்லாம் திமுகக்காரர்கள். குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலையில் போலீஸ் இருக்கிறது.
உண்மையான விடுதலை, விடியலை 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் உழைப்பாளர் தினத்தில் கொண்டாடுவோம்,” என்று அவர் பேசினார். தொழிற் சங்க பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் தலைமை வகித்தார். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மதுரை மாநகர் அண்ணா தொழிற் சங்க நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.