வைகை அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால் குறைந்து வரும் நீர்மட்டம்!


நீர்வரத்து இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம்  வெகுவாய் குறைந்து வருகிறது

ஆண்டிபட்டி: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து இன்றி வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாய் குறைந்து வருகிறது.

வைகை அணைக்கு மூலவைகை, முல்லைப் பெரியாறு மற்றும் வைகையின் துணை ஆறுகளான கொட்டக்குடி, வராகநதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மூலம் நீர்வரத்து உள்ளது.கடந்த சில வாரங்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் நீர்வரத்து வெகுவாய் குறைந்தது. இந்நிலையில், மூலவைகை மற்றும் வைகையில் துணை ஆறுகள் நீர்வரத்து இன்றி வறண்டு கிடக்கின்றன. பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி நீர் குடிநீர் திட்டங்களுக்காக திறக்கப்படுகின்றன.

இந்த நீரும் வழியில் காய்ந்து கிடக்கும் மணல் படுகையால் உறிஞ்சப்படுகின்றன. இதனால் ஏப்.10-ம் தேதி விநாடிக்கு 111கனஅடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக குறைந்து இன்று (மே 2) 14 கனஅடியாக மாறியது. இதே போல் 56.96 அடியாக இருந்த நீர்மட்டம் (மொத்த உயரம் 71) இன்று 55.60அடியாக குறைந்தது.

தற்போது வைகை அணையில் இருந்து குடிநீர் திட்டங்களுக்கு மட்டும் 72 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுரை சித்திரை திருவிழாவுக்காக அணையில் இருந்து சில நாட்களில் நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் நீர்மட்டம் மேலும் குறையும் நிலை உள்ளது.

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தற்போது மழை பெய்வதற்கான அறிகுறி இருந்து வருகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர் மழை பெய்தால் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கும். கோடை கால குடிநீர் தேவைக்கான நீர் அணையில் போதுமான அளவு உள்ளது” என்றனர்.

x