பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: மே 10-ல் தேரோட்டம்


பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமை (மே 2) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழநி மேற்கு ரத வீதியில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. 400 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இக்கோயிலில் மூலவர் நாராயணப் பெருமாள்,தாயார் லட்சுமியுடன் அருள்பாலிக்கிறார். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை (மே 2) காலை கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோயில் துணை ஆணையர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவையொட்டி 10 நாட்களும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.

மே 8-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் திருக்கல்யாணம், மே 10-ம் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.மே 12-ம் தேதி காலை 8 மணிக்கு சித்ரா பவுர்ணமியையொட்டி பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து திருஆவினன்குடி கோயிலுக்கு 108 பால்குடங்கள் எடுத்து வருதல், அன்று இரவு 8 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளல் ஆகியவை நடைபெற உள்ளது.

x