நாட்றம்பள்ளி அருகே குட்டிகளுடன் வந்த கரடி தாக்கியதில் 2 பெண்கள் காயம்: கூண்டு வைத்து பிடித்த வனத்துறை


நாட்றம்பள்ளி அருகே ஊருக்குள் நுழைந்த தாய் கரடி மற்றும் குட்டிகள்.

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே 2 குட்டிகளுடன் வந்த கரடி தாக்கியதில் 2 பெண்கள் காயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே செத்தமலை பகுதியிலிருந்து இரண்டு குட்டிகளுடன் தாய் கரடி மேல்மாமுடி மானப்பள்ளி விவசாய நிலத்திற்குள் நேற்று திடீரென நுழைந்தது.

அப்போது அங்கு விவசாய நிலத்தில் பருத்தி எடுத்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி மணிமேகலையைத் தாய் கரடி திடீரென தாக்கியது. இதில், மணிமேகலை காயமடைந்து அலறி துடித்துக் கூச்சலிட்டார். வேரது அலறல் கேட்டு ஓடிச்சென்ற சக தொழிலாளர்கள் கரடியை விரட்டியடித்து மணிமேகலையை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொழிலாளர்கள் விரட்டியபோது 2 குட்டி கரடிகளும் மலைப்பகுதிக்குள் தப்பி ஓடின. தாய் கரடி வேறு திசையில் தப்பி பேட்டைராயன் வட்டம் பகுதியில் உள்ள ராஜி என்ற பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கு அவரை தாக்கியது. இதில் ராஜிக்கு காயம் ஏற்பட்டது. மேலும், கரடிக்கு வாய் பகுதியில் காயம் ஏற்பட்டது. கரடி ஊருக்குள் நுழைந்து பொதுமக்களைத் தாக்கி வருவதாக திருப்பத்தூர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், வனத்துறையினர், நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினர் மற்றும் நாட்றம்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்குக் கம்பி வலை மற்றும் இரும்பு கூண்டோடு சம்பந்தப்பட்ட கிராமத்துக்குச் சென்று கரடியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், வலையை விரித்து கரடியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, சுற்றுச்சுவர் மீது ஏறிய கரடி திடீரென கீழே குதித்து அங்கிருந்து தப்பி ஓடியது. அப்போது, அங்கு வனத்துறையினர் வைத்திருந்த கூண்டுக்குள் கரடி தானாகச் சிக்கியது. நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு வனத்துறையினர் கூண்டுக்குள் சிக்கிய கரடியை அருகேயுள்ள வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விட்டனர். நாட்றம்பள்ளி அருகே ஊருக்குள் நுழைந்த கரடி பொதுமக்களை விரட்டி தாக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் நேற்று பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

x