தூத்துக்குடி: சாதி வாரி கணக்கெடுப்பு பிற்போக்குத்தனமானது. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி கூறினார். தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு மதுரையில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கொள்கையுடன் இதை நடத்துகிறோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமம் தோறும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளேன். மே மாதம் 31-ம் தேதி வரை சுற்றுப்பயணம் நடைபெறும். தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதில் புதிய தமிழகம் கட்சிக்கு உடன்பாடு கிடையாது. இந்தியா ஏற்கெனவே மதரீதியாக பிளவுபட்டு ஒரு தேசத்தையே இழந்துள்ளோம்.
பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்த சூழலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை முற்போக்கு நடவடிக்கையாக கருதவில்லை. அதை அரசியல் நிர்ப்பந்தங்களுக்காக பாஜக அரசு அறிவித்து உள்ளது. இது ஒரு பிற்போக்குதனமான நடவடிக்கை ஆகும். சாதிகளில் பல உட்பிரிவுகள் உள்ளன. இதனை எப்படி கணக்கெடுப்பீர்கள்?.
சாதிவாரி கணக்கெடுப்பு மீண்டும் சாதியை நிரந்தரமாக இருக்க செய்துவிடும். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பள்ளி, கல்லூரிகளில் சாதியை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது.
சாதிவாரி கணக்கெடுப்புக்கான அடிப்படை நோக்கம் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இதை பாஜக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.