கோவை: ஈஷாவில் தங்கியிருக்கும் தமிழ் அல்லாத பிற மொழிகளை தாய் மொழியாக கொண்டிருக்கும் மக்களுக்கு ஈஷாவில் தமிழ் மொழியை கற்றுத்தரும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
கோவை ஈஷா யோகா மையத்துக்கு, யோகப் பயிற்சிகளை கற்றுக் கொள்ளவும், தியானலிங்கம், லிங்க பைரவி மற்றும் ஆதியோகியின் தரிசனம் பெறவும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
பல்வேறு கலாச்சார பின்னணிகளை கொண்ட மக்கள் ஈஷா யோகா மையத்துக்கு, வந்து தங்கியிருந்து ஈஷாவின் பல்வேறு ஆன்மீக மற்றும் சமூக நலப் பணிகளில் தங்களை முழு நேரமாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அவ்வாறு ஈஷாவில் தங்கியிருக்கும் தமிழ் அல்லாத பிற மொழிகளை தாய் மொழியாக கொண்டிருக்கும் மக்களுக்கு ஈஷாவில் தமிழ் மொழியை கற்றுத்தரும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ஈஷாவில் தமிழ் மொழி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடந்தும் அருண் கூறும்போது, ‘‘ஈஷாவில் பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் தன்னார்வலர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு தமிழ் மொழியில் எழுத, படிக்க, பேச, பாட மற்றும் உரையாடல்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்படுகின்றது. இப்பயிற்சி வகுப்புகள் முதல் நிலையில் 12 நாட்கள் தொடர் பயிற்சி வகுப்புகளாகவும், அடுத்த நிலையில் வாரத்திற்கு ஒரு நாள் வகுப்பு என 10 முதல் 12 வாரங்கள் நடைபெறும் வகையில் நடத்தப்படுகிறது.
முதல் நிலை பயிற்சியில் ஒவ்வொரு நாள் வகுப்புகளும் மூன்று பகுதிகளாக பிரித்து நடத்தப்படுகிறது. ஒரு நாளில் இரண்டு மணி நேரம் நடைபெறும் வகுப்பில் முதல் பகுதியில் உயிர் எழுத்துக்கள் துவங்கி வார்த்தைகளை எழுதுவது வரை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதியில் தமிழ் வார்த்தைகளை படிக்க பயிற்சி அளிக்கப்படுகின்றது.
மூன்றாம் பகுதியில் தமிழ் பண்பாட்டின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் கதைகள் மூலமாக குறிப்பாக கோயில்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பக்தி உள்ளிட்டவைகள் தொடர்பான கதைகள் மூலம் தமிழ் மொழியுடன் பண்பாட்டையும் கற்றுத் தருகிறோம். இதனுடன் அவர்கள் தன்னார்வத் தொண்டு புரியும் துறைகளில், அன்றாடும் தேவைப்படும் உரையாடல்கள் மற்றும் திரைப்படத்தின் வசனங்களை கொண்டும் அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதுவரை 5 வகுப்புகள் முடிவடைந்துள்ளன. இதில் சமீபத்தில் முடிவடைந்த பயிற்சி வகுப்பில் 75 பேர் கலந்து கொண்டனர். குறிப்பாக ரஷ்யா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், மேற்குவங்கம், ராஜஸ்தான், பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டு தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டனர்’’என்றார்.