மதுரை: ‘எனக்கு மாநில அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது. என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வர வாய்ப்பில்லை’ என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.
சகாயம், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்தவர். நேர்மையான போக்கு காரணமாக அவர் எண்ணற்ற முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் 2021ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இவர் நேரடியாக அரசியலுக்கு வந்து, இவரின் அமைப்பினர் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர்.
சகாயம் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த மிகப்பெரிய ஊழலை வெளி கொண்டு வந்தார். அவர் தாக்கல் செய்த 600 பக்க அறிக்கையின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம் ஆனது. இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர் சாட்சியம் அளிக்க மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதுகுறித்து சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'எனக்கு மாநில அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது. என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வர வாய்ப்பில்லை. .
கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், என் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. எனவே, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் கோர்ட்டில் ஆஜராக இயலாத நிலை இருப்பதை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது, தவறானது, முறையற்றது. பாதுகாப்பை விலக்கும் முடிவை எடுத்தவர்கள், எனக்கு இருக்கும் அச்சுறுத்தல் பற்றி புரிந்து கொள்ளவில்லை.
சமூகத்திற்காக நிற்கும் மனிதனை பாதுகாக்க வேண்டியது சமூகத்தின் கடமை. நான் சட்ட ஆணையராக இருந்தபோது எனக்கு 2 மிரட்டல் கடிதங்கள் வந்தன. என்னை வெட்டி கனிம சுரங்கத்தில் வீசி விடுவோம் என மிரட்டினார்கள். அந்த மிரட்டல் கடிதங்கள் குறித்த புகாரில் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை’ என சகாயம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.