நீ​தி​மன்​றத்​தில் சாட்​சி​யம் அளிக்க போலீஸாருக்கு நவீன வசதிகளுடன் எழும்​பூரில் வீடியோ கான்​பரன்ஸ் அறை திறப்பு


புலன் விசாரணை காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வசதியாக எழும்பூரில் தனி வீடியோ கான்பரன்ஸ் அறை திறக்கப்பட்டுள்ளது. இதை கூடுதல் காவல் ஆணையர் விஜயேந்திர பிதாரி திறந்து வைத்தார்.

சென்னை: அலைச்சலை தடுக்கும் வகையில் புலன் விசாரணை காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வசதியாக எழும்பூரில் தனி வீடியோ கான்பரன்ஸ் அறை திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் அரசு அதிகாரிகள், வழக்கு புலன் விசாரணை அதிகாரிகள் ‘வீடியோ கான்பரன்ஸ்’ (காணொலி) மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வழங்கும் சாட்சியங்களை பதிவு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் எழும்பூரில் உள்ள கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் அதிநவீன உயர் வரையறை வீடியோ கான்பரன்ஸ் உபகரணங்கள், ஆடியோ, வீடியோ பதிவுகள் சேகரிப்பு மற்றும் சேமிப்பு காப்பக வசதிகள், சாட்சியங்களின் தனிப்பட்ட ரகசியம் காக்கும் வசதியுடன் ‘வீடியோ கான்பரன்ஸ்’ அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்தை சென்னை காவல் கூடுதல் ஆணையர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி நேற்று திறந்து வைத்து, அந்த மெய்நிகர் சாட்சி அறையின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் உடனிருந்தார்.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை காவல் துறையைச் சேர்ந்த வழக்கு விசாரணை அதிகாரிகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவசியமின்றி, மாநிலம் முழுவதும் உள்ள நீதித்துறை நடவடிக்கைகளில் சாட்சியங்களை வழங்க இந்த மெய்நிகர் சாட்சி அறை உதவும். மேலும் இந்த வசதி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

மெய்நிகர் சாட்சி அறை, வீடியோ கான்பரன்ஸ் வசதி ஏற்பாடுகள் காவல் துறை, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கும் ஒரு முன்னோடி டிஜிட்டல் மற்றும் நவீனமய வழிகாட்டுதல் ஆகும். இந்த நடவடிக்கைகள் நீதிமன்ற வழக்கு விசாரணை துரிதமாக நடப்பதற்கும், போலீஸார் நீதிமன்றத்தில் எந்தவித தாமதமுமின்றி சாட்சியங்களை வழங்கி, தேவையற்ற பயண அலைக்கழிப்பு நீக்கப்பட்டு சீரிய நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. இவ்வாறு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

x