சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அதிமுக சார்பில் மே 7-ம் தேதி பள்ளிக்கரணையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள சாலைகளைப் புதுப்பித்தல் மற்றும் புதிய சாலை வசதிகளை ஏற்படுத்தாததாலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாலும் மக்கள் சிரமப்படுகின்றனர்.
வீராங்கல் ஓடையில் உள்ள குப்பை தூர்வாரப்படாமல் இருப்பதாலும், தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளப்படாததாலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதி முழுமையாக ஏற்படுத்தித் தராததால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
முறையாக தடுப்புகள் அமைக்காமல் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்ய தேவையான பொருட்கள் வழங்கப்படாத காரணத்தால், அம்மா உணவகங்களில் முறையாக உணவு வழங்கப்படுவதில்லை.
புழுதிவாக்கம், ஜல்லடியன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பூர்வீகமாகக் குடியிருக்கும் மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. பள்ளிக்கரணை - வேளச்சேரி பிரதான சாலையை அகலப்படுத்தும் பணி சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல் உள்ள, திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யாத திமுக அரசைக் கண்டித்தும், மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வலியுறுத்தியும், மே 7-ம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக்கரணையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகக் கட்டிடம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையிலும், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.