புதுச்சேரி: ஈசிஆரில் வாஜ்பாய் பெயரில் புதிதாக பேருந்து நிலையம் கட்ட ஒரு மாதத்துக்குள் அடிக்கல் நாட்டப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு என்னுடைய ஆட்சி காலத்திலேயே கட்டி திறந்துள்ளோம். நல்ல கட்டமைப்போடு அமைக்கப்பட்டுள்ளது. கடைகள் விரைவில் திறக்க ஆவணச் செய்யப்படும். மக்களுடைய வசதிக்கேற்ப கழிப்பிட வசதி சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. மக்கள் வசதிக்கு ஏற்ப அனைத்து பணிகளும் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு பேருந்து நிலையம் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் ஈசிஆர் சாலையில் கட்ட ஒரு மாதத்துக்குள் அடிக்கல் நாட்டப்படும். இந்த பேருந்து நிலையம் வரும்போது, நகரப்பகுதியில் பேருந்துகளால் ஏற்படும் நெரிசல் குறையும். அரசானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தொடங்கிய அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. பல பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
அவற்றை விரைவில் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தைகள் விளையாட்டு திறனை மேம்படுத்த விரைவில் அண்ணா திடலில் கட்டப்பட்ட சிறு விளையாட்டு அரங்கம் திறக்கப்படும். சொன்னதை செய்கின்ற அரசு இது . எல்லா திட்டங்களையும் விரைவாக நிறைவேற்றும்.
இந்த அரசு சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுகின்ற அரசாகதான் இருக்கும்.
ராஜீவ் காந்தி சதுக்கம் – இந்திரா காந்தி சதுக்கம் இடையேயான மேம்பாலப்பணிகள் மத்திய அரசு உதவியோடு விரைவில் துவக்கப்படும். அதேபோல், ஏஏப்டி திடலின் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியும் விரைவில் துவங்கப்படும். அதற்கு ஏற்கெனவே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. என்றார்.