புதுப்பிக்கப்பட்ட புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் திறப்பு: கல்வெட்டில் இடம் பெறாத ராஜீவ்காந்தி பெயர்!


புதுச்சேரி: புதுப்பிக்கப்பட்ட புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் இன்று திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட கல்வெட்டு, விழா அழைப்பிதழில் ராஜீவ்காந்தி பெயர் இடம் பெறவில்லை.

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. அடிப்படை வசதிகள் குறைபாட்டால் இந்த புதிய பேருந்து நிலையத்தை முழுவதுமாக இடித்து, புதிதாக கட்ட தீர்மானிக்கப்பட்டது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் இதற்காக ரூ.29.50 கோடி செலவில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி கடந்தாண்டு தொடங்கியது.

இதற்காக, கடலுார் சாலையில் உள்ள ஏஎஃப்டி மில் திடலுக்கு பேருந்து நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
அங்கு வசதிகள் இல்லாததால் புதிய பேருந்து நிலைய பணிகளை முடித்து உடனடியாக திறக்க கோரிக்கைள் வலுத்தன.இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் பணிகள் முடிவடைந்தன. ஆனால், திறக்கப்படும் தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் ஒவ்வொரு தேதியாக கூறப்பட்டு, பின் அந்த தேதிகளில் திறக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

பேருந்து நிலையத்துக்கு வெளியே ராஜீவ்காந்தி ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து நிலையம் என பெயர் பலகை வைக்கப்பட்டது. அதேநேரத்தில் பேருந்து நிலையத்துக்கு பிரதமர் மோடி, வாஜ்பாய் பெயர்களை வைக்க பாஜக தரப்பில் பேரணி நடத்தி கோரிக்கைகள் வைத்தன. அதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் முதல்வர் ரங்கசாமி, "ஈசிஆரில் திறக்கப்படவுள்ள பஸ் நிலையத்துக்கு வாஜ்பாய் பெயர் வைக்கப்படும்" எனதெரிவித்தார்.

இச்சூழலில் நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று காலை திறப்பு விழா நடந்தது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர். முதல்வர் ரங்கசாமி பூஜை செய்தார். பின்னர் பேருந்து நிலையத்தை சுற்றி பார்த்தனர். திறப்பு விழா கல்வெட்டில் ஒருங்கிணைந்த பொலிவுறு பேருந்து முனையம் என்றே இருந்தது.

அதில் ராஜீவ்காந்தி பெயர் இடம் பெறவில்லை. விழா அழைப்பிதழிலும் பெயர் இடம் பெறவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ராஜீவ்காந்தி பெயருடன் அரசாணை ஏதும் இல்லை. அதனால் கல்வெட்டில் ராஜீவ்காந்தி பெயர் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் முன்பு பேருந்து நிலைய அறிவிப்பு பலகையில் இருந்ததால் அதை அப்படியே முன்பு வைத்துவிட்டோம்" என்றனர்.

x