தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,640 சரிவு


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,640 குறைந்து, ரூ.70,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அட்சய திருதியை நாளில் ரூ.13 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.12-ம் தேதி பவுன் ரூ.70,160 ஆகவும், ஏப்.22-ம் தேதி ரூ.74,320 ஆகவும் என அடுத்தடுத்து வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. இருப்பினும், கடந்த 23-ம் தேதி பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்து, ரூ.72,120 ஆக இருந்தது. இதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. நேற்றுமுன்தினம் தங்கம் விலையில் மாற்றமின்றி காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,640 குறைந்து, ரூ.70,200-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.205 குறைந்து, ரூ.8,775-க்கு விற்பனையானது. 24 காரட் கொண்ட சுத்தத் தங்கம் ரூ.76,576-க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.109 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து, ரூ.1 லட்சத்து 9 ஆயிரமாகவும் இருந்தது.

ரூ.13 ஆயிரம் கோடிக்கு விற்பனை: இதுகுறித்து, தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் கூறும்போது, ‘‘சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை நீடிக்கிறது. இதனால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் ஓரிரு வாரத்துக்கு தொடரும். அட்சய திருதியை நாளில் சில இடங்களில் வியாபாரம் நன்றாகவும், சில இடங்களில் கடந்த ஆண்டு போலவும் இருந்தது. அன்றைய தினம் ரூ.13,000 கோடிக்கு தங்கம் விற்பனை நடைபெற்று உள்ளது’’ என்றனர்.

சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, "அட்சய திருதியை விற்பனை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நன்றாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த அட்சய திருதியை நாளில் பவுனுக்கு ரூ.18 ஆயிரம் வரை விலை அதிகமாக இருந்தது. அடுத்த ஆண்டு பவுன் ரூ.80 ஆயிரத்தை தொட்டு விடும். சர்வதேச சந்தையில் தங்கம் பெரிய மாற்றுப் பொருளாக திகழ்கிறது" என்றார்.

x