சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவ காப்பீடு வார்டில் எலி தொல்லை: நோயாளிகள் அவதி


சிவகங்கை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாருக்கு நிகராக இருக்க வேண்டிய முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்ட வார்டில் எலிகள் தொல்லை, துர்நாற்றத்தால் நோயாளிகள், பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் முதல் தளத்தில் குளிர்சாதன வசதியுடன், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட வார்டு உள்ளது. இங்கு 24 படுக்கைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு குளிர்சாதனம், மின் விசிறிகள் இயங்காமல் இருந்ததாக தொடர்ந்து புகார் எழுந்தது. அவற்றை சமீபத்தில் பொதுப்பணித் துறையினர் சரி செய்தனர்.

இந்நிலையில் அந்த வார்டில் உள்ள கதவுகள் சேதமடைந்து இருப்பதால், அதன் வழியாக இரவு நேரங்களில் எலிகள் வார்டுக்குள் புகுந்து தொல்லை கொடுத்து வருகின்றன. குடிநீர் இயந்திரம் பழுதடைந்ததால், கீழ் தளத்துக்கு சென்று குடிநீர் எடுத்து வர வேண்டியுள்ளது. பெண்கள் கழிப்பறையில் அடைப்பு உள்ளதால் வார்டு முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

காப்பீடு நிறுவனத்திடம் இருந்து கட்டணம் பெறுவதால், அரசு மருத்துவமனைகளில் உள்ள முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட வார்டுகள் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை தெரிவித்தது.

ஆனால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட வார்டில் எலித் தொல்லை, துர்நாற்றம், குடிநீர் இல்லாமல் நோயாளிகள், பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து மருத்துவமனையில் கேட்டபோது, ‘பொதுப்பணித் துறையிடம் புகார் செய்துவிட்டோம். கழிப்பறை அடைப்பை சரி செய்ய அதிக தொகை தேவைப்படும் என்று கூறுகின்றனர். கதவு ஓட்டைகளை அட்டை பெட்டிகளை வைத்து அடைத்தும், எலிகள் வந்து விடுகின்றன’ என்றனர்.

x