ராணிப்பேட்டையில் சோகம்: ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு


ராணிப்பேட்டை: பாணாவரம் அருகே ஏரியில் குளிக்க சென்ற ‌2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் பாணாவரம் அடுத்த கீழ் வீராணம் கிராமம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நித்தியானந்த ம் (45), விவசாயி. இவரது மகன் நிஷாந்த் (6). இவர், திருப்பாற்கடல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவரது உறவினர் ஆற்காடு அடுத்த சாத்தூரைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவரது மகன் வீரவேல் (8) என்பவர் விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். இந்நிலையில் நிஷாந்த், வீரவேல் சிறுவர்கள் உட்பட 4 பேர் நேற்று சூரைக்குளம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றனர். அப்போது நிஷாந்த்தும், வீரவேலும் ஏரிக்கரையோரம் வந்த மீன்களை பார்க்க தண்ணீரில் இறங்கியுள்ளனர்.

திடீரென ஆழமான பகுதிக்கு தண்ணீர் இழுத்து செல்லப்பட்டதால் நீரில் மூழ்கி தத்தளித்தனர். கரையில் அமர்ந்திருந்த ‌ உடன் சென்ற 2 சிறுவர்கள் ஓடி வந்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். சம்பவ இடத்துக்கு ஓடிச்சென்ற கிராம மக்கள் நீரில் இறங்கி இருவரையும் மீட்டு பாணாவரம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர் இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்ட ‌சிறுவர்களின் பெற்றோர்கள் கதறி அழுதனர். இது குறித்து பாணாவரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x