பரங்கிமலை காவல் பயிற்சி மையத்தில் 6 மாதங்கள் பயிற்சி: மோப்ப நாய் ‘டோரா’ பணியில் சேர்ப்பு


சென்னை: பரங்கிமலை காவல் பயிற்சி மையத்தில் 6 மாதங்கள் பயிற்சி முடித்த மோப்ப நாய் "டோரா', வேலூர் மாவட்ட மோப்ப நாய் பிரிவில் பணியில் நேற்று சேர்க்கப்பட்டது.

வேலூர் மாவட்ட காவல் துறையின் மோப்ப நாய்கள் பிரிவில் ஏற்கெனவே 4 மோப்ப நாய்கள் பணியில் உள்ளன. இதில், அக்னி, ரீட்டா ஆகிய மோப்ப நாய்கள் வெடி பொருட்கள் கண்டுபிடிப்புகளுக்காகவும், ‘சாரா’ குற்றங்கள் நடைபெற்றால் துப்பறியவும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், தடுக்கவும் கடந்த மாதம் வாங்கப்பட்ட பெல்ஜியம் செப்பர்டு இனத்தைச் சேர்ந்த "ருத்ரா'’ என பெயரிடப்பட்ட மோப்ப நாய் தற்போது வேலூரில் பயிற்சியில் இருந்து வருகிறது. இதனிடையே, குற்றங்களை துப்பறிவதற்காக 'டோரா' என்ற மற்றொரு மோப்ப நாய் சென்னை பரங்கிமலை காவல் பயிற்சி மையத்துக்கு அனுப்பப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இந்த மோப்ப நாய் 6 மாதங்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து வேலூருக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், இந்த மோப்ப நாய்க்கான பயிற்சி சான்றிதழை பயிற்சியாளர்களிடம் வழங்கியதுடன், மோப்ப நாய்க்கு சரியான நேரத்தில் உணவு அளிக்க வேண்டும். மேலும், தேவையான ஓய்வு அளிக்க வேண்டும். ஒழுங்காக பராமரிக்க வேண்டும் என அறிவுரை கூறினார். அப்போது, மாவட்ட மோப்ப நாய்கள் பிரிவு காவல் ஆய்வாளர் கனிமொழி, காவலர்கள் ஜெரால்டு வில்சன், சசிக் குமார், லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x