புதுச்சேரி: தரவரிசைப் பட்டியலில் சரிவு, நிர்வாக சிக்கல்கள், மாணவர்களின் குறைகள் என வரிசைக்கட்டும் பிரச்சினைகள் அதிகரித்துள்ள நிலையில் அதை சமாளித்து மீண்டும் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தை புதிய துணை வேந்தர் பனித்தி பிரகாஷ் பாபு முன்னேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் 800 ஏக்கர் பரப்பளவில் 1985ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் துணைவேந்தராக கடந்த 2017ம் ஆண்டு குர்மீத் சிங் நியமிக்கப்பட்டு, கடந்த 2023 நவம்பரில் பணி ஓய்வு பெற்றுச் சென்றார். அதையடுத்து புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியரும், கல்விப் பிரிவின் இயக்குநருமான க.தரணிக்கரசு துணை வேந்தர் பொறுப்பை கவனித்து வந்தார்.
இந்தநிலையில், ஹைதராபாத் பல்கலைக் கழகத்தின் உயிரித் தொழில் நுட்பம் மற்றும் உயிரித் தகவலியல் துறை முதுநிலை பேராசிரியரான பனித்தி பிரகாஷ் பாபு நியமிக்கப்பட்டுள்ளார். சில ஆண்டுகளாக பல்கலைக் கழகத்தின் நிலை மோசமாகியுள்ளதாக பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். உயர் கல்வி வளர்ச்சிக் காக அமைந்த இப்பல்கலைக் கழகம், தற்போது தரவரிசை பட்டியலில் சரிந்துள்ளது.
கடந்த கல்வியாண்டில். 100 சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முந்தைய இடத்தை (68-வது இடம்) இப்பல்கலைக்கழகம் இழந்துள்ளது. இந்தாண்டு மத்திய பல்கலைக் கழகம் மேலும் கீழிறங்கி, 101 - 150 என்ற நிலைக்கு உட்பட்ட தரவரிசையில் உள்ளது. 2016ல் 74.74 புள்ளிகளுடன் 13 வது இடத்தைப் பிடித்த புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் சில ஆண்டுகளாக படிப்படியாக சரிந்து வருகிறது. இதன் மூலம் 8 ஆண்டுகளில், புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் 13-வது இடத்தில் இருந்து 100-வது இடத்தைத் தாண்டி வெளியே சென்றுள்ளது.
இந்தச்சூழலில் பதிவாளர் நியமன பிரச்சினையிலும் சிக்கி பல்கலைக்கழக நிர்வாகம் ஸ்தம்பித்தது. கடந்த 2017ம் ஆண்டு டிச.15 அறிவிப்பாணை யின்படி, தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய சசிகாந்த தாஸ் இந்த பல்கலைக் கழகத்தின் பதிவாளராக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2018 ஜூலை 5ம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.
பல்கலைக்கழக செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த 2019 பிப்.20 அன்று அவரை பதிவாளர் பணியில் இருந்து விடுவித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் மீண்டும் சசிகாந்த தாஸ்க்கு பதிவாளர் பதவியை வழங்க உத்தரவிட்டது. ஆனால் சசி காந்த தாஸ் பல்கலைக் கழக பதிவாளர் பணியில் சேர்ந்தும் கூட, அப்போதைய துணை வேந்தர் தரணிகரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அனுமதி இல்லாமல் பல்கலைக் கழகத்திற்குள் வர கூடாது என்று உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸில் புகார் அளித்தார். இதற்கிடையே பதிவாளராக நியமிக்கப்படடு, பதவியில் உள்ள ரஜினிஷ் புட்டானிக்கும், சசிகாந் தாஸுக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் நிர்வாகம் பாதிப்பில் உள்ளது.
இப்பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக் கழக வட்டாரங்களில் விசாரித்தபோது, “முக்கிய உயர் பதவிகள் அனைத்தும் பல ஆண்டுகளாக ‘பொறுப்பு’ பதவிகளின் அடிப்படையில் தான் கவனிக்கப்பட்டு வருகிறது. பதிவாளர் பதவியும் பொறுப்பு பதவியாகவே கடந்த சில ஆண்டுகளாக தொடர்கிறது.
பல்கலைக்கழகத்தின் நிதி அதிகாரி 5 ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. பல்கலைக்கழக பணியாளர் புத்தாக்க பயிற்சி மையம் சரியாக நிதியை கையாளவில்லை. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் அந்த பயிற்சி மையத்தில் மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய உயர் கல்வி நிதியில் இருந்து ரூ. 500 கோடி கடன் வாங்கப்பட்டு, பல்கலைக்கழக வளாகத்தில் 11 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இந்த கட்டிடங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. 200 பணியிடங்கள் வரை காலியாக உள்ளது. பதவி உயர்வு கொடுக்கப்படவில்லை. இதுபோல் பல்கலைக்கழகத்தில் பல பிரச்சினைகள் உள்ளன" என்று குறிப்பிடுகின்றனர்.
மாணவர்கள் தரப்பில் கூறுகையில், “பல்கலைக் கழகத்தில், புதுச்சேரி மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் 25 சத இடஒதுக்கீடு தரவில்லை. இது நீண்ட கால பிரச்சினையாக உள்ளது. முன்பிருந்த மாணவர்களுக்கான பேருந்து வசதி நிறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்காக 2,500 பேர் அமரக்கூடிய மெகா ஆடிட்டோரியம் ரூ. 70 கோடி செலவில் கட்டப்பட்டும், ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய பணப் பிரச்சினை காரணமாக, அந்த ஆடிட்டோரியம் ஜப்தி செய்யப்பட்டது. இதுவரையிலும் அது பயன்பாட்டுக்கு வரவில்லை. பல ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவும் நடத்தப்படவில்லை. பல்கலைக் கழகத்தின் உட்புற சாலைகளும் மோசமாக உள்ளன” என்று அடுக்கக்கடுக்காக தங்களின் குறைகளைத் தெரிவிக்கின்றனர்.
இதைத் தாண்டி மிக முக்கிய பிரச்சினையாக, செமஸ்டர் தேர்வுகள் சரியான நேரத்தில் நடத்தி முடிவுகள் வருவதில்லை என்பதை பல துறை மாணவர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். உரிய நேரத்தில் தேர்வு முடிவுகள் வராததால் உயர்கல்விக்கு பிற கல்வி நிறுவனங்களில் இடம் கிடைப்பதில், மற்றும் வேலைக்குச் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. செமஸ்டர் தேர்வின் வினாத் தாள் மாறி, அவ்வப்போது குளறுபடி நடக்கிறது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி சீர்படுத்த வேண்டும் கல்வியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், புதிய துணை வேந்தர் பனித்தி பிரகாஷ் பாபு ஒன்றரை மாதங்களை கடந்து விட்டது. புதிய துணை வேந்தர் இதையெல்லாம் சரி செய்து, பல்கலைக் கழக நிர்வாகத்தை செம்மைப் படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.