கொல்லிமலையில் 32,034 பேருக்கு ‘ஹீமோ குளோபினோபதி’ பரிசோதனை: நாமக்கல் ஆட்சியர் தகவல்


நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா

நாமக்கல்: கொல்லிமலையில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வரும் 6 மாதங்களில் 32,034 பேருக்கு ஹீமோ குளோபினோபதி பரிசோதனை மேற்கொள்ளப் படும் என ஆட்சியர் ச.உமா தெரிவித்தார்.

கொல்லிமலை கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ரத்த சிவப்பணு மற்றும் புரத குறைபாட்டால் ஏற்படும் நோய்களைக் கண்டறியும் பரிசோதனை முகாம் நடத்துவது குறித்த முன்னேற்பாடு பணி ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் ச.உமா தலைமை வகித்துப் பேசியதாவது:

கொல்லிமலையில் பிறந்த குழந்தை முதல் 40 வயத்துக்கு உட்பட்டவர்களுக்கு ரத்த சிவப்பணு மற்றும் புரத குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் (ஹீமோ குளோபினோபதி) கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இந்நோய் உள்ள குழந்தைகள் பிறக்காமல் தடுத்தல், ஹீமோ குளோபினோபதி தலசீமியா, சிக்கில்செல் அனிமீயா உள்ளவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளித்தல் இந்த முகாமின் நோக்கம்.

கொல்லிமலையில் கடந்த 2023-24ம் ஆண்டு 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள் 1,827 பேருக்கும், 2024-25ம் ஆண்டு 1,323 பேருக்கும் ஹீமோகுளோபினோபதி பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2022ம் ஆண்டு முதல் பிப்ரவரி 2025 வரை 1,941 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹீமோ குளோபினோபதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொல்லிமலையில் பிறந்த குழந்தைகள் முதல் 40 வயதுக்கு உட்பட்ட சுமார் 32,034 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இம்முகாம் கொல்லிமலையில் உள்ள அனைத்து கிராமங்கள் தோறும் நடைபெற உள்ளது. பரிசோதனை களை மேற்கொள்ள தலா 6 பேர் கொண்ட 5 குழுக்கள் பணியில் ஈடுபட உள்ளனர். வரும் 6 மாதம் இப்பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட நல அலுவலர் க.பூங்கொடி, மகளிர் திட்ட இயக்குநர் கு.செல்வராசு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

x