நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் ஆங்கில எழுத்துக்கள் மீது தமிழ் ஆர்வலர்கள் கருப்பு துணியை போர்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாரதி தாசன் பிறந்த நாளையொட்டி தமிழ் வார விழா நிகழ்ச்சிகள் அரசு சார்பிலும், கல்வி நிலையங்களிலும் நடைபெறும் நிலையில், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்களை மறைக்கும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தென்மண்டல தலைவர் கண்மணி மாவீரன், ஆட்சி தமிழ்ப் புரட்சி கொற்றம் ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் கருப்பு துணியை போர்த்தினர்.
இது குறித்து வியனரசு கூறியதாவது: அரசு அலுவலகங்கள், மாநகராட்சி கட்டிடங்களின் பெயர்கள் மற்றும் அறிவிப்பு பலகையில் தமிழ் ஆட்சி மொழி சட்ட அரசாணைகளின்படி தமிழில் எழுத வேண்டி திருநெல்வேலி மாநகராட்சியில் 21 முறை விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மாநகராட்சி அறிவிப்பு பலகைகள், பெயர் பலகைகளில் ஆங்கில எழுத்துகள் தற்போதும் காணப்படுகின்றன. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் முன்பக்கத்தில், ‘ஐ லவ் நெல்லை’ என்ற அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது.
இதை உடனடியாக அகற்றிவிட்டு, ‘சிறப்பு வாய்ந்த எனது நெல்லை’ என தமிழ் எழுத்துகளை பொறிக்க கோரி மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தினோம். அதற்கும் நடவடிக்கை இல்லை. மாநகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து ஆங்கில பெயர் பலகைகளை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.