கொலை வழக்கு விசாரணை: விருதுநகர் நீதிமன்றத்தில் வரிச்சியூர் செல்வம் ஆஜர்


விருதுநகர்: கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக விருதுநகர் நீதிமன்றத்தில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் நேற்று ஆஜரானார். வழக்கு விசாரணை மே 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (32). இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து வந்தார். பின்னர், வரிச்சியூர் செல்வத்திடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகினார். கடந்த 2021ம் ஆண்டு திடீரென செந்தில்குமார் காணாமல் போனார். இதுகுறித்து அவரது மனைவி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், செந்தில் குமார் சுட்டுக் கொல்லப்பட்டு உடல் எரிக்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக வரிச்சியூர் செல்வம் உள்பட 7 பேர் மீது விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, விருதுநகர் 2-வது நீதித் துறை நடுவர் மன்றத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வம் உட்பட 6 பேர் நேரில் ஆஜராகினர்.

வழக்கில் தொடர்புடைய லோகேஷ், மற்றொரு வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, புழல் சிறையில் இருந்தவாறு காணொலி மூலம் லோகேஷிடம் விசாரணை நடந்தது. சிறிது நேரத்தில் திடீரென காணொலி தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 6 பேரையும் அறைக்கு வெளியே காத்திருக்குமாறு நீதித்துறை நடுவர் ஐயப்பன் உத்தரவிட்டார்.

அப்போது, செல்போன் பேசியபடி நீதிமன்றத்துக்குள் நுழைந்த கிழக்கு காவல் நிலைய காவலர் ரவியை, நீதித் துறை நடுவர் கண்டித்தார். அதோடு, நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி அவரது செல்போனை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, காவலர் ரவியின் செல்போனை நீதிமன்ற ஊழியர் பறிமுதல் செய்தார். சற்று நேரத்துக்குப் பிறகு புழல் சிறையிலிருந்தபடி காணொலி மூலம் லோகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணையை மே 9ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதித்துறை நடுவர் ஐயப்பன் உத்தரவிட்டார்.

x