மதுரை: சித்திரைத் திருவிழா தொடங்கிய நிலையில், தமுக்கம் மைதானத்தில் நடப்பாண்டு அரசு சித்திரைப் பொருட்காட்சி மே 4-ம் தேதி தொடங்குகிறது.
மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி சுவாமி வீதி உலா, வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு, தமுக்கத்தில் ஆண்டுதோறும் 45 நாட்கள் நடைபெறும் சித்திரை பொருட்காட்சி சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பொழுதுபோக்கும் இடமாக இருக்கும். இந்த பொருட்காட்சி நடப்பாண்டு இதுவரை தொடங்கவில்லை. சித்திரைத் திருவிழாவுக்கு இந்த ஆண்டு 20 லட்சம் பக்தர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மாநகராட்சி கணித்துள்ளது.
இதையொட்டி நடைபெறும் சித்திரை பொருட்காட்சியில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 35-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெறும். இந்த அரங்குகள் மட்டுமில்லாது விழாவுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம் பெறும். உள்ளூரில் பிரபலமான விதம் விதமான சுவையான சிற்றுண்டி வகைகளும் அரங்குகளில் விற்கப்படும்.
இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சுவாமி தரிசனம் செய்து விட்டு சித்திரை பொருட்காட்சியை சுற்றி பார்த்து விட்டு மனநிறைவோடு செல்வர். ஆனால், கரோனா காலத்துக்குப் பிறகு சித்திரைப் பொருட்காட்சியை சரியான நேரத்தில் தொடங்குவதில்லை.
சித்திரைத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கும், மதுரை நகருக்கும் ஏராளமான பக்தர்கள், குடும்பம், குடும்பமாக வரத் தொடங்கி உள்ளனர். ஆனால், தற்போது வரை பொருட்காட்சி தொடங்கப்படவில்லை என்ற ஏமாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், செய்தி மக்கள் தொடர்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசு பொருட்காட்சி மே 4ம் தேதி முதல் தொடங்குகிறது. பொது மக்களையும், பக்தர்களையும் கவரும் வகையில் 35 வகையான அரங்குகள் இடம் பெறுகின்றன." என்றார்.