நாகை: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை துறைமுகத்துக்கு சுபம் என்ற தனியார் நிறுவனம் சார்பில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் கப்பலுக்கான கட்டணத் தொகையை அந்நிறுவனம் குறைத்து அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அந்நிறுவனத்தின் சேர்மன் சுந்தர் ராஜ் நாகையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: நாகையில் இருநது காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதால், பயணிகள் கட்டணத்தை ரூ.8,500-ல் இருந்து ரூ.8,000 ஆக குறைத்துள்ளோம். மேலும், பயணிகள் தங்களின் உடைமைகளாக 10 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதை 7 கிலோ ஹேண்ட் பேக் எடையாகவும், 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளோம்.
இதுதவிர, ரூ.15,000 கட்டணத்தில் 2 இரவுகள் உட்பட 3 நாட்களுக்கும், ரூ.30,000 கட்டணத்தில் 5 இரவுகள் உட்பட 6 நாட்களுக்கும் சுற்றுலா பேக்கேஜ் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த பேக்கேஜ் மூலம் ராமர் பாலத்தை நேரடியாக பார்வையிடவும், அதில் நடந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மேலும், இத்திட்டத்தில் இரு வழி பயண கட்டணம், தங்கும் வசதி, போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும்.
2-வது பயணிகள் கப்பல்: நாகையில் இருந்து காங்கேசன் துறை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்கு வரத்து ஜூலை 15ம் தேதி தொடங்க வாய்ப்புகள் உள்ளன. அதுபோல, மே 2 வது வாரத்தில் 2-வது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதில் 220 எக்கனாமிக், 20 பிசினஸ், 10 சூட் ரூம்கள் என 250 இருக்கைகள் இருக்கும்.
இயல்பாக வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் நாகையில் இருந்து இலங்கைக்கான கப்பல் போக்கு வரத்தை நிறுத்தி வைப்பது வழக்கம். ஆனால், இந்த 2-வது கப்பல் புயல் சின்னம் உருவாகும் காலத்தை தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களிலும் ஆண்டு முழுவதும் இயங்கும் வகையிலான தரத்தில் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.