கோவை: வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் வெள்ளை ஈ தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும். வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீதமிருக்கும் மரங்களை பாதுகாக்க ஆலோசனை வழங்க வேண்டும்.
அனைத்து தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். சொட்டு நீர் பாசனத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை விவசாயிகள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எ.காளப்பன் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பழனிசாமி, மாவட்ட பொருளாளர் ஜெ.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தாலுகா தலைவர் ஏ.ஈஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் திரளான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.