திருப்பூர்: பொங்கலூரை தலைமை இடமாக கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு, பொதுமக்களும், விவசாயிகளும் வரவேற்பு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 22 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. இதில் பல்லடம் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில், பல்லடம், காமநாயக்கன்பாளையம் மற்றும் அவிநாசிபாளையம் ஆகிய இடங்களில் மட்டுமே காவல் நிலையங்கள் உள்ளன. இந்த மூன்று, காவல் நிலையங்களின் எல்லைகள் அதிக பரப்பை கொண்டிருந்ததால், பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
பல்லடம் மற்றும் அவிநாசிபாளையம் இடையே தேசிய நெடுஞ்சாலை 81ல் அமைந்துள்ள பொங்கலூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகளிடையே கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில், அவிநாசிபாளையம் அருகே உள்ள சேமலை கவுண்டன் பாளையத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.
இதனால், புறநகர் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில், பொங்கலூரை தலைமையிடமாகக் கொண்டு திருப்பூர் மாவட்டத்தின் 23 வது சட்டம்,ஒழுங்கு காவல் நிலையம் விரைவில் அமைக்கப்படுமென அறிவித்துள்ளார். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பல்லடம், காம நாயக்கன் பாளையம் மற்றும் அவிநாசிபாளையம் காவல் நிலையங்களின் சில பகுதிகளை இணைத்து, பொங்கலூர் காவல் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இது, மற்ற மூன்று காவல் நிலையங்களில் பணி புரியும் போலீஸாரின் பணிச் சுமையைக் குறைக்கும். முதற்கட்டமாக 30 போலீஸாருடன் புதிய காவல் நிலையம் திறக்கப்படும். அரசு உத்தரவு, நிதி ஒதுக்கீடு உட்பட சில வழக்கமான நடைமுறைகள் உள்ளன. இந்த பணிகள் முடிந்ததும் 2 அல்லது 3 மாதங்களில் பொங்கலூரில் காவல் நிலையம் செயல்பட வாய்ப்புள்ளது, என்றனர்.
பொங்கலூர் பிஏபி பாசனத் தலைவர் கோபால் கூறியதாவது: பொங்கலூரை தலைமையிடமாக கொண்டு காவல் நிலையம் அமைப்பதை வரவேற்கிறோம். இதன்மூலம் எதிர்காலத்தில் குற்றங்கள் கட்டுப்படுத்தப் படும். கொடுவாயை தாண்டி உள்ள காட்டூர் கிராமத்தை, அங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் இணைத்துள்ளனர். இனி, பொங்கலூர் காவல் நிலையத்தில் இணைப்பார்கள். வாவிபாளையம், மாதப்பூர், உகாயனூர் ஆகிய பகுதிகளை பொங்கலூரில் இணைக்க வேண்டும். தோட்டத்து வீடுகளில் விவசாயிகள் குடும்பத்துடன் வசிப்பதால், இரவு நேரங்களில் கூடுதல் போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும், என்றார்.