சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சங்க நிர்வாகிகளான நாசர், விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சங்க உறுப்பினரான நம்பிராஜன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தென்னிந்திய நடிகர் சங்க சட்ட விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி மற்றும் துணைத் தலைவர்களாக பூச்சிமுருகன், கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது.
கடந்த 2024 செப்.8 அன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றுவருவதாகக் கூறி, நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுக் கூட்டத்துக்கான அழைப்பிதழில் இந்த தீர்மானம் தொடர்பான எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்பதால் பதவிக்காலத்தை நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சங்கங்கள் பதிவு சட்ட விதிகளின்படி சட்டரீதியாக செல்லாது. கட்டிடம் கட்டும்பணியை சுட்டிக்காட்டி பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது.
எனவே அந்த தீர்மானத்தை சட்டவிரோதம் என அறிவித்து, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என தடை விதிக்க வேண்டும், எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் ஜூன் 4-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.