புதுச்சேரி பேருந்து நிலையம் திறப்பு விழா தடுக்கப்பட்டது ஏன்? - ஆளுநர் மாளிகைக்கு அதிமுக கேள்வி


புதுச்சேரி: பேருந்து நிலையம் திறப்பு விழா தடுக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து ஆளுநர் மாளிகையும், தலைமை செயலாளரும் தெரிவிக்க வேண்டும் என்று புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய பேருந்து நிலையம் ஏப். 30 (இன்று) திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் திறப்பு விழா நிறுத்தப்பட்டுள்ளது.

திறப்பு விழாவுக்கு துணைநிலை ஆளுநர் சம்மதம் தெரிவிக்கவில்லை என தகவல் வருகின்றன. மக்களின் தேவைக்காக பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக இருந்த நிலையில், தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி திறப்பு நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் மாளிகையால் தடுக்கப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானதாகும். இதுபோன்ற செயல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், முதல்வரையும் அவமதிக்கும் செயலாகும். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேலையில் கூட்டணியில் உள்ள முதல்வரை பலவீனப்படுத்தும் இச்செயல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

திறப்பு விழாவுக்காக அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழா தடுக்கப்பட்டது ஏன்? என்பதை ஆளுநர் மாளிகையும், தலைமை செயலாளரும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஆளுநரின் அனுமதியை பெறாமலேயே திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று இருந்தால் அதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். பேருந்து நிலையம் விரிவாக்கம் நடைபெறும் போதே அதில் நடக்கும் முறைகேடுகளும், தவறுகளும், பணம் வீண் விரயமும் நடைபெறுவதாக அந்த தொகுதியின் எம்எல்ஏ மற்றும் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு சுமத்தினர்.

அரசின் நிதியை முறையற்ற முறையில் ஒப்பந்தம் என்ற பெயரில் கொள்ளையடிக்க காரணமாக இருந்த சம்மந்தப்பட்ட எந்த அதிகாரிகள் மீதும் இதுவரை நடவடிக்கை இல்லை. மாறாக அரசின் சார்பில் அதில் நடைபெற்று உள்ள முறைகேடுகள் சம்பந்தமாக ஒரு சிறு அளவில் கூட உயர்மட்ட விசாரணையை அரசு நடத்தவில்லை.

துணைநிலை ஆளுநரும், முதல்வரும் அதற்கான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மாறாக ரூ.29.50 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்ட பணிக்கு மேலாக ரூ.4 கோடி கூடுதல் நிதி அந்த ஒப்பந்ததாரருக்கு ஏன் வழங்கப்பட்டுள்ளது. அரசு நிர்வாகம் என்பது ஒளிவுமறைவற்ற வெளிப்படையான நேர்மையான நிர்வாகமாக இருக்க வேண்டும். கடலூர் சாலை ஏ.எப்.டி மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்படுவதால் தினசரி போக்குவரத்து நெரிசல் அந்த பகுதியில் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

அதே போன்று கடலூர் சாலை, ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி பூமி பூஜை போடப்பட்டு பல மாதம் ஆகியும் அப்பணியும் செய்வதற்கு இந்த தற்காலிக பேருந்து நிலையம் இடைஞ்சலாக உள்ளதையும் அரசு உணரவில்லை. எனவே முதல்வர் ஓரிரண்டு தினங்களுக்குள் புதிய பேருந்து நிலையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

x