ஓசூர் அரசு மருத்துவமனை அவலம்: உள் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்கும் அறை பிற தேவைக்கு பயன்படுத்துவதால் மக்கள் அவதி


கிருஷ்ணகிரி: ஓசூர் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உள்நோயாளிகளின் உதவியாளர்கள் தங்கும் அறை மருத்துவமனையின் பிற தேவைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், இரவு நேரங்களில் பாதுகாப்பின்றி மருத்துவமனை வளாகம் மற்றும் சாலையோரங்களில் உள்நோயாளிகளின் உதவியாளர்கள் தூங்கும் நிலையிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஓசூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், மத்திகிரி, தளி உள்ளிட்ட மலைக் கிராமங்களிலிருந்தும், ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் என தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 300-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.

இதில், பெரும்பாலும் அஞ்செட்டி, உரிகம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள எளிய மக்கள் அதிகம். உள்நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் தங்குவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு மருத்துவமனை வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் இரண்டு தளங்களைக் கொண்ட புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டிட பணி நிறைவடைந்த நிலையில், 2020-21ல் கரோனா தொற்று பரவல் ஏற்பட்டபோது, இக்கட்டிடம் கரோனா சிறப்பு வார்டாக செயல்பட்டது.

தற்போது, தரை தளம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகமாகவும், முதல் தளம் ஏஆர்டி மையமாகவும், இரண்டாவது தளம் மருத்துவமனை உபகரணங்கள் வைக்கும் குடோனாகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. உள்நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட கட்டிடம் அதன் நோக்கம் நிறைவேறாமல், பிறதேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதால், உதவியாளர்கள் இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகத்தில் திறந்தவெளியிலும், சாலையோரங்களிலும் பாதுகாப்பின்றி தூங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக உள்நோயாளிகளின் உதவியாளர்கள் சிலர் கூறியதாவது: அரசு மருத்துவமனைக்கு பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள் வருகிறோம். உள்நோயாளிகளுடன் வருவோர் மருத்துவமனையில் தங்க அறை இல்லாததால், இரவு நேரங்களில் பாதுகாப்பின்றி திறந்த வெளிகளில் தங்கும் அவலம் உள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பல்வேறு சிரமங்களுடன் இரவு பொழுதை தூங்காமல், அச்சத்துடன் கழிக்கும் நிலையுள்ளது.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் கால்வாய் பகுதியில் தூக்க வேண்டிய நிலையுள்ளதால், கொசுக்கடியால் உதவியாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனிடையே, இரவில் சாலையோரங்களில் தூங்குவோரை போலீஸார் ரோந்து வந்து விரட்டி விடுவதோடு, சிலரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லும் நிலையும் உள்ளது.

எனவே, உள்நோயாளிகளின் உதவியாளர்களுக்காகக் கட்டப்பட்ட அறையை உதவியாளர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது புதிதாக தங்கும் அறை கட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x