சென்னை: விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களை வேலைக்கு அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது பள்ளித் தேர்வுகள் முடிவடைந்துள்ளதால் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தடுப்பு படை கூட்டாய்வின் போது விடுமுறை நாட்களில் 18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டால் பணி அமர்த்திய நிறுவனம் மீது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
மேலும், 18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 18 வயதுக்குட்பட்ட எவரும் பள்ளி அல்லது திறன் வளர் பயிற்சி பயிலாமல் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தாலும் பள்ளி படிப்பினை தொடர்ந்து கொண்டே பணிபுரிந்து கொண்டிருந்தாலும் அது குறித்து 1098 சைல்டு லைன் உதவி எண் அல்லது pencil.gov.in என்ற வலைதளத்தில் புகார்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.