சிவகங்கை: திருப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலரை திமுக பேரூராட்சித் தலைவரின் கணவர் மிரட்டியதாகவும், தன்னிடம் வாங்கிய ரூ.3.5 லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக தலைவரின் கணவரும் மாறி, மாறி புகார் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த கோகிலராணி உள்ளார். இங்கு செயல் அலுவலராக பணியாற்றும் தனுஷ்கோடி., பேரூராட்சித் தலைவரின் கணவர் நாராயணன் தன்னை மிரட்டியதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் செயல் அலுவலராகப் பொறுப்பேற்ற போது திருப்பத்தூர் பேரூராட்சியில் ரூ.2.25 கோடி கடன் இருந்தது. அதை பல கோடி ரூபாய் வருவாய் உள்ள பேரூராட்சியாக மாற்றினேன். கடந்த மார்ச் 30ம் தேதி எனது தந்தை இறந்ததால் விடுப்பில் சென்றேன். அப்போது பள்ளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக திருப்பத்தூரை கவனித்தார். நான் ஏப்.11ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்தும், இதுவரை பள்ளத்தூர் செயல் அலுவலர் பொறுப்புகளை என்னிடம் ஒப்படைக்கவில்லை. இதனால் நிர்வாக செலவினம் செய்ய முடியவில்லை.
மேலும் பேரூராட்சி பணத்தை தவறான முறையில் எடுக்க, தலைவரின் கணவர் என்னை மேலும் ஒரு மாதத்துக்கு விடுப்பில் செல்லுமாறு கூறி சிலருடன் வந்து மிரட்டினார். தமிழக முதல்வர் உள்ளாட்சி பிரதிநிதிகளின் கணவர்கள் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என எச்சரித்தும், பேரூராட்சித் தலைவரின் கணவர் நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. செயல் அலுவலருக்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் சிவகங்கை முழுவதும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
இது குறித்து பேரூராட்சித் தலைவரின் கணவர் நாராயணனிடம் கேட்டபோது, ”நான் பேரூராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. பேரூராட்சி செயல் அலுவலர் முறைகேடு செய்தார். இதனால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய என்னிடம் ரூ.3.5 லட்சம் வாங்கினார். அதைத் திருப்பிக் கேட்டேன். தர மறுத்ததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன். இதையடுத்து என் மீது பொய்யான புகாரை தெரிவித்துள்ளார்” என்றார்.
பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி கூறுகையில்,”எனக்கு பணம் வாங்க வேண்டிய தேவையில்லை. எனது மனைவியும் அரசு ஊழியராக உள்ளார். என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார்” என்றார்.