கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதி அருகே வசித்து வரும் நபர் இன்று காலை இயற்கை உபாதை கழிக்க சென்ற போது காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்தார்.
சிறுமுகை வனச்சரகம், ஓடந்துறை பிரிவு, ஓடந்துறை சுற்று நிர்வாக எல்லைக்குட்பட்ட வேடர்காலனி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன்(34). இன்று(ஏப்ரல் 30) காலை 6.15 மணி அளவில் காலைக்கடன் கழிப்பதற்காக சென்ற போது, யானை தாக்கியது. உடனடியாக அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவரை பார்வையிட்டனர். வலது முகத்தில் காயங்களும், இடது கையில் எலும்பு முறிவு, உடலில் சிராய்ப்பு காயங்களும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல்நிலையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.