புதுச்சேரி: இன்று நடைபெறுவதாக இருந்த புதிய பேருந்து நிலைய திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.29.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஜூலை 16ம் தேதி முதல் ஏஎப்டி திடலுக்கு புதிய பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டது.
அனைத்து பேருந்துகளும் ஏஎப்டி திடலில் இருந்து இயங்கப்பட்டு வருகின்றன. தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளே இல்லாததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலைய கட்டுமான பணி நிறைவடைந்து, நகராட்சி தரப்பில் ஒப்படைக்கப் பட்டு பல மாதங்களாகியும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேருந்து நிலையத்தின் மைய பகுதியில் போக்குவரத்து முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு கடைகள், உணவகங்கள், பயணிகள் காத்திருப்பகம், போக்குவரத்து அலுவலகம், பயணச்சீட்டு பதிவகம், ஆம்னி பேருந்து அலுவலகங்கள், இரு பயணிகளுக் கான இரவு தங்கும் அறைகள், விசாரணை அலுவலகம், தகவல் மையம், முதலுதவி அறை, கட்டுப்பாட்டு அறை, நிர்வாக அலுவலகம், மின் அலுவலகம், பொருள் காப்பகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கடந்த ஜனவரி முதல், ஒவ்வொரு தேதியாக குறிப்பிட்டு பின்னர் திறப்பு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இம்முறை அட்சய திருதியை நாளான இன்று புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால் நேற்று இரவு இத்திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக தொகுதி எம்எல்ஏ நேரு தரப்பில் கூறுகையில், "புதிய பேருந்து நிலையம் இன்று புதன் கிழமை திறப்படுவதாக இருந்தது. தற்போது வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மே 4ம் தேதி புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் என தெரிகிறது. இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்று தெரிவித்தனர்.