திருச்சி ரேஷன் கடைகளில் அரசு உப்பு தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி


திருச்சி: அரசு உப்பு விநியோகம் செய்யப்படாமல், திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரசு உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 938 முழு நேர மற்றும் 273 பகுதி நேர ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிபக் கழக கட்டுப் பாட்டில் 20 ரேஷன் கடைகள் என மொத்தம் 1,231 கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை, உப்பு, டீ தூள் ஆகியவை விநியோகிக்கப்பட்டு, மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதில், மாவட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு 200 டன் உப்பு கோரப்பட்டு, 150 டன் உப்பு விற்பனையாகி வருகிறது.

இவற்றை தமிழ்நாடு உப்புக் கழகம் விநியோகம் செய்கின்றன. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் அரசு உப்பு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக நிகழ் மாதத்துக்கான உப்பு, அடுத்த மாதம்தான் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, ரேஷன் கடைகளில் அரசு உப்பு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: மார்ச் மாதம் நிதியாண்டு முடிந்ததால், இருப்பில் உள்ள உப்பை விற்றுத் தீர்க்கும் நோக்கில் உப்பு வாங்குவதை சில கடைகள் நிறுத்தி வைத்திருந்தன. உப்பு விலை குறைவு என்பதால், சிறிய அளவில் விநியோகம் செய்வதில்லை. மொத்தமாகத்தான் விநியோகம் செய்வார்கள்.

மேலும், வெயில் காரணமாக லோடு மேன்கள் வேலைக்கு வருவதில் தாமதம் ஏற்படுவதால் உப்பு விநியோகத்தில் சில இடங்களில் சுணக்கம் உள்ளது. அதேவேளையில், திருச்சி மாவட்டத்தில் பெரிய அளவில் உப்புத் தட்டுப்பாடு இல்லை. இருப்பினும், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அரசு உப்பு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

x