சமயபுரம் கோயில் நிர்வாகம் சார்பில் நிகழாண்டே செவிலியர் கல்லூரி தொடங்கப்படுமா?


படம்:ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: சமயபுரம் கோயில் நிர்வாகம் சார்பில் நிகழாண்டே செவிலியர் கல்லூரி தொடங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் நிர்வாகங்கள் சார்பில் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சமயபுரம் மாரியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் நிகழாண்டே செவிலியர் கல்லூரியை தொடங்கி மாணவர்களை சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இனாம் சமயபுரம் பேரூராட்சியில் ஈச்சம்பட்டி சாலையில் கோயிலுக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு புதிதாக கட்டிடம் கட்டி கல்லூரியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுவரை கோயில் திருமண மண்டபம் அருகே கோயில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்படும் கருணை இல்ல கட்டிடத்தில் தற்காலிகமாக கல்லூரியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் மாணவர் சேர்க்கையை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழாண்டு 40 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பை மட்டும் தொடங்கவும், வரும் ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 3 வகுப்புகள் வரை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை உயரதிகாரிகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த செவிலியர் கல்லூரிக்கு முதல்வர், ஆசிரியர்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன் கூறியது: சமயபுரம் மாரியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் நிகழாண்டு தொடங்கப்படும் செவிலியர் கல்லூரியில், தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப் படும் கட்டணத்தை விட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கட்டணம் இருக்கும். இதனால் ஏழை, எளிய மக்கள் மற்றும் கோயில் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு குறைந்த செலவில் தரமான கல்வியும், வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்றார்.

x