திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலைய பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: கம்யூ. கவுன்சிலர்கள் எதிர்ப்பு


படம்:ர.செல்வமுத்துகுமார்

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆணையர் வே.சரவணன், துணை மேயர் ஜி. திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியது: ரெக்ஸ் (காங்கிரஸ்): எனது வார்டில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்து செல்வம் (திமுக): 57, 62 ஆகிய 2 வார்டுகளுக்கும் சேர்த்து ஒரேயொரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மட்டுமே உள்ளது. இதில், 600 குடியிருப்புகள் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுவதால், 57-வது வார்டில் கடும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது.

காஜாமலை விஜய் (திமுக): 9 மாதங்களாக நான் தெரிவிக்கும் எனது வார்டு பிரச்சினைகளைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையையும் மேயர் எடுப்பதில்லை.

அப்பீஸ் முத்துக்குமார் (மதிமுக): திருவானைக்காவல் சந்நிதி வீதியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர வேண்டும். திருவானைக்காவல் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

க.சுரேஷ் (இந்திய கம்யூனிஸ்ட்): அரசு பொது மருத்துவமனையில் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளது. குடிநீர் குழாயில் நேரிடும் பிரச்சினைகளை சரி செய்ய மாநகராட்சியில் போதிய எண்ணிக்கையில் பிளம்பர்கள் இல்லை. பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய பராமரிப்பை தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட்டு, மாநகராட்சி நிர்வாகமே நிர்வகிக்க வேண்டும். இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இதேகோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எஸ்.சுரேஷும் வலியுறுத்தினார்.

பன்னீர்செல்வம் (திமுக): தெரு நாய்களுக்கு அவை பருவம் அடையும் முன்னதாகவே கருத்தடை செய்ய வேண்டும்.

அம்பிகாபதி (அதிமுக):வயர்லெஸ் சாலையில் எரியாமல் உள்ள மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும். இந்தச் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ் (திமுக): புதை சாக்கடை பணிகள் முடிவடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் வீடுகளுக்கு இன்னும் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. பிரச்சினைகளை சரி செய்வதில் மேயர் நேரடி கவனம் செலுத்த வேண்டும். அதிகாரிகள் சொல்வதை மட்டும் நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது.

கவுன்சிலர்களுக்கு பதிலளித்து மேயர் அன்பழகன் பேசியது: தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் 3 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அப்போது, திருச்சி மாநகராட்சியில் காலியாக உள்ள பிளம்பர், எலெக்ட்ரீசியன், இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.

திருச்சி மாநகராட்சியில் சோதனை முயற்சியாக முதற்கட்டமாக 25 வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்பு விழா முடிந்து சில நாட்களுக்குப் பிறகு செயல்பாட்டுக்கு வரும்.

பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை நமது நேரடி பராமரிப்பில் சிறப்பாக செயல்படுத்த முடியாது என்பதால் தான் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சப்பூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க டெண்டர் விடப்பட உள்ளது. இப்பணி தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டில் முடிவடையும்.

திருச்சி மாநகராட்சியில் 2023 ஏப்ரல் முதல் 2025 ஏப்ரல் வரையிலான 2 ஆண்டுகளில் 22,367 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார்.

இக்கூட்டத்தில், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு அணுகு சாலை அமைப்பது, பஞ்சப்பூர் கனரக சரக்கு வாகன முனைய பராமரிப்புப் பணிகளை 6 மாதங்களுக்கு தனியாரிடம் ஒப்படைப்பதற்கு அனுமதி, நடிகர் சிவாஜி சிலையை வார்னர்ஸ் சாலைப் பூங்காவில் வைக்க அரசின் அனுமதி பெற்றுத் தரக் கோரி ஆட்சியருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

x