தேனி கண்ணகி கோயில் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு வனத்துறை தடைவிதிப்பு: பக்தர்கள் அதிர்ச்சி!


தேனி: கண்ணகி கோயில் சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றத்தில் இரு தரப்புக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டதால், வனத்துறையினர் கொடியேற்றத்துக்கு அனுமதி மறுத்து அனைவரையும் வெளியேற்றினர். வெளியாட்கள் வருவதைத் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் கண்ணகி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா மே 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, கண்ணகி கோயில் மலையடிவாரமான பளியன்குடியில் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் நேற்று கொடியேற்றத்துக்காக வந்திருந்தனர்.

அப்போது, மற்றொரு பிரிவினரும் கொடியேற்றத்துக்காக வந்தனர். இதனால் கொடியேற்றுவதில் சர்ச்சை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கூடலூர் வனச்சரகர் முரளீதரன், காவல் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், உத்தமபாளையம் வட்டாட்சியர் கண்ணன், துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இரு தரப்பினருமே கொடியேற்ற வேண்டும் என்று கூறியதால், நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, பளியன் குடியில் உள்ள வனப்பாதை இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டன. வெளியாட்கள் இங்கு வர தடை விதிக்கப் பட்டு, வனத்துறையினர் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் பின்னர், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் கம்பத்தில் உள்ள தங்கள் அலுவலகத்துக் குச் சென்று கொடியேற்றினர். இதற்காக பச்சை மூங்கிலில் கண்ணகியின் உருவம் பொறித்த மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. மங்கல வாத்தியங்கள் முழங்க பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ‘இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் சில பிரிவினர் கொடியேற்றம், அன்னதானம் உள்ளிட்டவற்றை முன்னெடுத்து நடத்துகின்றனர். இருப்பினும், கொடியேற்றத்தில் இரு தரப்பிலும் சர்ச்சை ஏற்பட்டது. எனவே, பிரச்சினை ஏற்படும் என்று கருதி பளியன்குடி கொடியேற்றத்துக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்’ என்றனர்.

இதுவரை பாரம்பரியமாக பளியன்குடியில் மலைவாழ் மக்களை ஒருங்கிணைத்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. தற்போது, அங்கு கொடியேற்றம் நடைபெறாததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

x