சிபிஐ மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்: ஐகோர்ட் அதிருப்தி


மதுரை: சிபிஐ மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் போலி ஆவணங்கள், ரசீது அடிப்படையில் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.2 கோடி கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக, அந்த வங்கியின் தலைமை மேலாளர் உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை மதுரை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து, வங்கி தலைமை மேலாளர் பாலசுப்பிரமணியன், சண்முகவேல், ராமலட்சுமி, செண்பகமூர்த்தி, முன்னாள் அமைச்சர் அம்மமுத்து உள்ளிட்ட 8 பேருக்கு சிறை தண்டனை வழங்கியும், 5 பேரை விடுதலை செய்தும் 2019-ல் தீர்ப்பளித்தது. இதையடுத்து, 8 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்து நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:

நாட்டின் முதன்மையான விசாரணை அமைப்பாக சிபிஐ திகழ்கிறது. பெரிய முறைகேடுகள், குற்றங்களை சிபிஐ விசாரிக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர். சிபிஐ அதிகாரிகள் நியாயமாக விசாரணை நடத்துவர் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.

ஆனால், தற்போது சிபிஐ விசாரணையின் போக்கு விமர்சிக்கும் வகையில்தான் உள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் குற்றவாளிகளுக்கு வெவ்வேறு அளவுகோல் வைத்து செயல்படுகின்றனர். சில வழக்குகளில் வலுவான ஆதாரங்கள் இருந்தும் உயரதிகாரிகளை விடுவித்து, கீழ்நிலை அதிகாரிகளை மட்டுமே குற்றவாளிகளாகக் காட்டுகின்றனர். சிபிஐ அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகின்றன.

சில வழக்குகளில் தேவையற்றவர்களை குற்றவாளிகளாகச் சேர்ப்பது, தேவையற்ற விசாரணையை தொடர்வது, ஆவண சாட்சியங்களை ஆய்வு செய்யாமல், அறிவியல்பூர்வ தடயங்களைச் சேகரிக்காமல் முக்கியக் குற்றவாளிகளை விடுவித்துவிட்டு விசாரணை நடத்துகின்றனர். இதன் காரணமாக சிபிஐ மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

சிபிஐ விசாரணை அமைப்பு தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைக்கிறார்களா? சிபிஐ மீது மக்கள் நம்பிக்கை பெறுவதற்கு நீதிமன்றம் சில பரிந்துரைகளைச் செய்ய விரும்புகிறது.

சிபிஐ வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள குற்றவாளிகளின் பெயர்கள், குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதா, யாராவது நீக்கப்பட்டுள்ளார்களா, விசாரணையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மற்றும் வழக்கு ஆவணங்கள் குறித்து சிபிஐ இயக்குநர் கண்காணிக்க வேண்டும்.

சிபிஐ வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் சட்ட முறைகளைப் பின்பற்றி அதிகாரி விசாரணை நடத்துகிறாரா என்பதைக் கண்காணிக்க தனி சட்டக் குழுவை உருவாக்க வேண்டும். சிபிஐ விசாரணை அதிகாரி தொழில்நுட்ப அறிவில் நிபுணத்துவம் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே 8 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

x