மதுரை: விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் நடந்த மாநில அளவிலான கபடிப் போட்டிக்கு அழைத்து வந்த பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தூத்துக்குடி அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வனை கடந்த 2018-ல் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம், ஆசிரியர் தமிழ்செல்வனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி 2021-ல் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழ்செல்வன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய சட்டம் இயற்றவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அனைத்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள செல்லும்போது கண்டிப்பாக பெண் ஆசிரியை உடன் செல்ல வேண்டும். மாணவிகள் தங்களின் பெற்றோரை உடன் அழைத்துச் செல்வது மற்றும் விளையாட்டு திடல், மாணவிகள் தங்கும் அறை, கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள் முழு பாதுகாப்புடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு மாணவிகளை அழைத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவிகளுக்குப் பாலியல் குறித்த ஆலோசனைகள் வழங்குவதோடு, தற்காப்புக் கலைகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி, "தமிழக அரசு சமூக நீதியைக் கடைப்பிடித்து, மாணவிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவது ஏற்கத்தக்கதல்ல. சம்பந்தப்பட்ட மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைக்குப் பின்னர் அவரது பள்ளிப் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு, திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளார். இதனால்தான் இந்த விவகாரத்தில் தமிழக அரசு மாணவிகளின் பாதுகாப்பு குறித்து உரிய சட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என நீதிமன்றம் விரும்பியது.
இந்த விவகாரத்தை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கும், தலைமைச் செயலருக்கும் பாராட்டுகள். இந்த வழக்கில் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.