மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வரும் சாலைகள், சுவாமி உலா வரும் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளை தவிர்த்து, பக்தர்கள் வந்து செல்லும் மற்ற சாலைகளில் உள்ள மேடு, பள்ளங்களையும் சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கியது. இனி அடுத்த சில வாரங்களுக்கு மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதும். தற்போது வைகை ஆற்றில் கள்ளழகர், இறங்கும் வைபவத்துக்கும் வரும் சாலைகளுக்கும், மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி வீதி உலா வரும் சாலைகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அரசு துறைகள் விழா ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.
ஆனால், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை கண்டுகளிக்க லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நகரச் சாலைகள், மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி வீதி உலாவை பார்க்க தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் குடும்பத்தோடு வந்து செல்லும் நகரச் சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்வதற்கும், தெரு விளக்குகளை அமைக்கவும், சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளவும் அரசு இயந்திரங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை மாநகராட்சி முன்னின்று செய்து வருகிறது. கள்ளழகர் அழகர் கோயிலில் இருந்து மதுரை வைகை ஆற்றுக்கு வரும் சாலைகள், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதிகள், மீண்டும் அழகர் கோயில் செல்லும் சாலைகள், மீனாட்சி அம்மன் கோயில் வீதிகள், சாமி வீதி உலா வரும் பகுதிகள் மற்றும் கள்ளழகர் மண்டக பகுதிகள் அமைந்துள்ள சாலைகளில் திரளும் பக்தர்களுக்கான வசதிகளை மாநகராட்சி ஆணையர் சித்ரா, கடந்த 2 வாரங்களுக்கு முன்பிருந்தே நேரடியாக ஆய்வு அதிகாரிகளுக்கு அந்த சாலைகளை சீரமைக்கவும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்துக்கு உள்ளூர் அரசியல் வாதிகள், விஐபிகள் வானகங்களில் வந்து செல்வதற்கும், அவர்களுக்கான வாகன நிறுத்தம் அமைப்பதற்குமே ஒவ்வொரு ஆண்டும் மாநகர காவல்துறையும், மாநகராட்சியும், பொதுப்பணித் துறையும், இந்து சமய அறநிலையத் துறையும் ஏற்பாடுகளை செய்கின்றனர். விஐபிகள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு மாநகர காவல் துறையும், பிற அரசு துறைகளும் கொடுக்கும் முக்கியத்துவத்தை பக்தர்கள் பாதுகாப்புக்கும், அவர்கள் வந்து செல்லும் சாலைகளை சீரமைக்கவும் கொடுப்பதில்லை.
கடந்த காலங்களில் மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல்துறையும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோட்டை விட்டதாலேயே 2022ம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில் நெரிசலில் 2 பேர் உயிரிழந்தனர். 2023ம் ஆண்டு திருவிழாவில் நெரிசலில் சிக்கியும், ஆற்றில் மூழ்கியும் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டும் மது குடித்துவிட்டு போதையில் தகராறு செய்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கோரிப்பாளையத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலர் காயமடைந்தனர்.
கள்ளழகரை பார்க்கவும், மீனாட்சி அம்மன், சாமி வீதி உலாவை பார்க்க தினமும் பக்தர்கள் வரும் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்படாததால் பலர் இரவு நேரங்களில் கீழே விழுந்தும், நெரிசலில் சிக்கியும் பலரும் சிரமப்பட்டனர். மாநகராட்சி ஆணையர் சித்ரா, மீனாட்சி அம்மன் கோயில் வீதிகளையும், கள்ளழகர் வரும் சாலைகளையும் தாண்டி ஒவ்வொரு நாளும் பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்க வரும் நகரச் சாலைகளையும் சீரமைக்கவும், தூய்மைப் பணி மேற்கொள்ளவும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யவும் இந்து சமய அறநிலையத் துறை, மாநகர காவல் துறையிடம் ஆலோசித்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
குறிப்பாக மேலமடை சந்திப்பு பகுதியில் நடக்கும் பாலப் பணிகள் காரணமாக ஆவின் சந்திப்பு முதலான சிவகங்கை சாலையில் கால்வாய் பணிகள் முழுமையடையாமலும், பாலக் கட்டுமானப் பணிகளுக்கான பொருட்களுமாக காணப்படுகிறது. கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளிய பிறகு இப்பகுதிக்கும் வருவார் என்பதால் பக்தர்கள் குவிவார்கள். அதற்கு முன்பாக இங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதேபோல் கர்டர் பாலத்தில் போதுமான மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழந்து காணப்படுகிறது. இப்பகுதி வழியாக ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருவிழாவைக் காண வந்து செல்வர். இதுபோல் மற்ற சாலைகளையும் சீரமைத்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.