தமிழக அரசுக்கு ரூ.50 லட்சம் அபராதம்: ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுத்த விவகாரத்தில் தீர்ப்பு!


திருப்பூர்: அரசு உதவி பெறும் கல்லூரியில் நியமிக்கப்பட்ட 12 ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க மறுத்த தமிழக அரசுக்கு ரூ. 50 லட்சம் அபராதம் விதித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த தொகையை சம்பந்தப்பட்ட கல்லூரிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமிருந்து 8 வார காலத்தில் வசூலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் இருந்த காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட 12 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரி அக்கல்லூரியின் செயலாளரான சுமதி கிருஷ்ணபிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அந்த 12 பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக உயர் கல்வித்துறை செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர், கல்லூரிக் கல்வி கோவை மண்டல இணை இயக்குனர் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த கல்லூரியில் ஆசிரியரல்லாப் பணியிடங்களை நிரப்ப நிபந்தனை அடிப்படையில் ஒப்புதல் வழங்கியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கடந்த 2022-ம் ஆண்டு தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராக பணிபுரிந்த சி. பூர்ண சந்திரனுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

அதேபோல விசாலாட்சி மகளிர் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யும்படி தமிழக கல்லூரிக்கல்வி இயக்குநரகத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவி்ட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இதே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான முன்னாள் கல்லூரிக்கல்வி இயக்குநரான சி. பூர்ணசந்திரன், நீதிபதிகள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் நின்று கொண்டிருந்தார். அதற்கு இது துரதிருஷ்டவசமானது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், அந்த கல்லூரிக்கென அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் குறித்த ஆவணங்கள் மாயமாகி விட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் எந்த உண்மையும் வெளியே வரக்கூடாது என கல்லூரிக்கல்வி இயக்குநரக அதிகாரிகள் எதையோ மறைக்க முயற்சி்க்கின்றனர். இந்த வழக்கில் தமிழக அரசு அதிகாரிகள் தப்பி்க்க முடியாது. எனவே தமிழக அரசின் இந்த மேல்முறை யீட்டு மனுவை ரூ. 50 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்கிறோம். இந்த அபராதத் தொகையில் சம்பந்தப்ப்டட அந்த 12 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும் தலா ரூ. 1.50 லட்சம் வீதம் 8 வாரங்களில் வழங்க வேண்டும்.

எஞ்சிய ரூ.32 லட்சத்தை அடையார் காந்தி நகரில் உள்ள கேன்கேர் பவுண்டேஷனுக்கும், நேத்ரோதயா ஆகிய அமைப்புகளுக்கு தலா ரூ. 16 லட்சம் வீதம் 8 வாரங்களில் பிரித்து வழங்க வேண்டும். இந்த அபராதத் தொகை ரூ. 50 லட்சத்தில் ரூ. 25 லட்சத்தை முன்னாள் கல்லூரிக் கல்வி இயக்குநரான பூர்ண சந்திரனிடமும், எஞ்சிய ரூ. 25 லட்சத்தை ஆவணங்கள் மாயமானதற்கு காரணமான சம்பந்தப்பட்ட கல்லூரிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமும் 8 வார காலத்தி்ல் வசூலிக்க வேண்டும்.

அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமை, எதையும் சொல்லக்கூடாது என்ற பிடிவாதம் போன்ற காரணங்களுக்காகவே இந்த அபராதத்தை விதிக்கிறோம். அதேபோல இந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், ஏற்கெனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி அந்த கல்லூரியில் நியமிக்கப்பட்ட 12 ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய ஊதியத்தையும் 8 வார காலத்தில் வழங்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர்.

x