வழிப்பறி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு தப்பி ஓடிய நபர்!


கோவை: நீதிமன்ற வளாகத்தில் வழிப்பறி வழக்கில் தீர்ப்பு வாசிக்கும் முன்பே தண்டனைக்கு பயந்து தப்பி ஓடிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். கடந்த 2006ல் 3 பேர் கொண்ட கும்பல் மகேஷை வழி மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் பணத்தைப் பறித்து சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த செந்தில் குமார், ரமேஷ் குமார், மதி வாணன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ் குமார் ஏற்கெனவே உயிரிழந்து விட்டார். ஜாமீனில் வெளியே வந்த மதி வாணன் தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கு விசாரணையில் செந்தில்குமார் மட்டும் ஆஜராகி வந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனிடையே தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் என நினைத்து செந்தில் குமார் தனது மனைவி, குழந்தைகளுடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

இதனிடையே நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாக பயந்து போன செந்தில் குமார், குழந்தைகளை பார்த்து வருவதாக அங்கிருந்த போலீஸ்காரரிடம் கூறி சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து, அவரை போலீஸார் வெளியே சென்று தேடி பார்த்தனர். அப்போது அவர் தப்பி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி, வழக்கில் செந்தில்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனிடையே நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

x