சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் நிகழாண்டில் பொதுப் பிரிவைச் சேர்ந்த (ஓ.சி.) கணவரை இழந்த ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வந்த வயது வரம்பு சலுகை 42-ல் இருந்து 37 வயதாக குறைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஏப்.25-ம் தேதி வெளியிடப்பட்டது. 10ம் வகுப்பை கல்வி தகுதியாகக் கொண்டு நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப் பணியிடங்களுக்கு தேர்வர்கள் வரும் மே 24ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். குரூப் 4 எழுத்து தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்த ஆதரவற்றோர், முன்னாள் படை வீரர்களுக்கு வயது வரம்பு சலுகை அளிக்கப் படுகிறது. கடந்த 2024 வரை கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., ஓ.சி. ஆகிய என அனைத்து பிரிவைச் சேர்ந்த கணவரை இழந்த ஆதரவற்றோருக்கு வயது வரம்பில் 42 வயது என சலுகை வழங்கப்பட்டு வந்தது.
நிகழாண்டில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுப் பிரிவைச் (ஓ.சி.) சேர்ந்த கணவரை இழந்த ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வந்த வயது வரம்பு திடீரென குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 37 என நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், குரூப் 4 தேர்வுகளுக்கு தயாராகி வந்த ஆதரவற்ற விதவைகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கணவரை இழந்த ஆதரவற்ற தேர்வர்கள் கூறும்போது, "கடந்த 2024ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 10-ம் வகுப்புக்கு மேல் உயர்கல்வி தகுதி பெற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த கணவரை இழந்த ஆதரவற்றோருக்கு வயது வரம்பு 42 ஆக நிர்ணயித்து அறிவிக்கப்பட்டது. நிகழாண்டில் வெளியான குரூப் 4 அறிவிக்கையில் பொதுப் பிரிவைச் சேர்ந்த (ஓ.சி.) தவிர்த்து இதர பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி ஆகிய பிரிவைச் சேர்ந்த கணவரை இழந்த ஆதரவற்றோருக்கு மட்டும் வயது வரம்பு 42 ஆக தொடர்கிறது.
ஆனால், பொதுப் பிரிவைச் சேர்ந்த (ஓ.சி.) கணவரை இழந்த ஆதரவற்றோருக்கு மட்டும் வயது வரம்பு 37 ஆக நிர்ணயித்து, வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. கணவரை இழந்த ஆதரவற்றோரில் பொது பிரிவினருக்கு (ஓ.சி.) மட்டும் வயது வரம்பு குறைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? இதனால் 38 வயது நிரம்பிய பல கணவரை இழந்த ஆதரவற்றோரால் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான குரூப் 4 தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுப்பிரிவைச் சேர்ந்த கணவரை இழந்த ஆதரவற்றோருக்கும் வயது வரம்பு 42 என நிர்ணயித்து டிஎன்பிஎஸ்சி அறிவிக்க வேண்டும்" என்றனர்.